சென்னை பழைய திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவரின் கொழுந்தன் சுரேஷ்குமார். ரமணியின் பக்கத்து வீட்டில் சுரேஷ்குமார் வசித்து வருகிறார். அதனால், ரமணிக்கு சுரேஷ்குமார் அடிக்கடி பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக ரமணி, தன்னுடைய கணவரிடம் புகாரளித்திருந்தார். நெருங்கிய உறவினர் என்பதால் ரமணியும் சுரேஷ்குமாரின் ஆபாச செயல்களால் மனவேதனையடைந்தாலும் அமைதியாக இருந்து வந்திருக்கிறார்.
இந்தச் சூழலில் 4-ம் தேதி மதியம் ரமணி வீட்டில் தனியாக இருந்தபோது சுரேஷ்குமார் நிர்வாணமாக நின்றபடி பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த ரமணி, தன்னுடைய கணவரிடம் இது குறித்து சொல்லியிருக்கிறார். இதையடுத்து இருவரும் திருமங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார், சுரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சுரேஷ்குமாரைக் கைதுசெய்தனர். விசாரணைக்குப்பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.