’தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பணி நிரந்தரம் செய்க’ – போராடிய செவிலியர்கள் கைது!

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் போராட்டம் நடத்திய, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனை வளாகத்தில் திடீரென திரண்டு தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். சிறிது நேரத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
தமிழகத்தில் மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015-ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக ஏறக்குறைய 5,000-க்கும் அதிகமான செவிலியர்கள் தற்காலிக பணிநியமனம் செய்யப்பட்டனர். அதில் 2,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் பணிநியமனம் செய்யப்பட்ட நிலையில், 3000-க்கும் மேற்பட்ட நபர்கள் கடந்த 7 ஆண்டுகளாக தற்காலிக செவிலியர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா உட்பட பேரிடர் காலத்தில் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் செவிலியர்களை தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி திமுக அரசு பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். முதற்கட்டமாக இன்று, தமிழகம் முழுவதும் செவிலியர்களை பணிநிரந்தம் செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக திட்டமிட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் பலன் இல்லை. அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.