நின்று போன 'சபாஷ் நாயுடு' மீண்டு வருகிறார் ?

கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு படம் 'சபாஷ் நாயுடு'. டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் ஆரம்பமான இப்படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இளைய மகள் அக்ஷரா படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவராகச் சேர்ந்தார்.

இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ராஜீவ்குமாருக்கு உடல்நலக் கறைவு ஏற்பட்டதால் கமல்ஹாசனே படத்தை இயக்க முடிவு செய்தார். 2016ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இயக்குனர் ராஜீவ்குமார் படத்திலிருந்து விலகிய பிறகு படத்தின் எடிட்டர் ஜேம்ஸ் ஜோசப்பும் விலகினார். அவரது மனைவிக்கு விபத்து ஏற்பட்டதே அவர் விலகக் காரணம். அமெரிக்காவில் ஒரு மாத படப்பிடிப்பு நடந்த பின் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெயகிருஷ்ணா கும்மாடியை மாற்றினார் கமல். அதற்கடுத்து சென்னை திரும்பிய பின் கமல்ஹாசன் வீட்டில் விழுந்து அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேற்படியான சம்பவங்களால் அப்படத்தின் படப்பிடிப்பு அப்படியே நின்றது. அதன் பிறகு கடந்த ஆறு வருடங்களாக படப்பிடிப்பு நடக்கவேயில்லை. 'சபாஷ் நாயுடு' படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து வந்த லைக்கா நிறுவனம் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன் 2' படத்தையும் ஆரம்பித்தது. ஆனால், அந்தப் படமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கி உள்ளது. விரைவில் 'இந்தியன் 2' ஆரம்பமாகும் என அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

இந்நிலையில் 'விக்ரம்' படத்திற்கான ஒரு பேட்டியில் கமல்ஹாசன் 'சபாஷ் நாயுடு' படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது என்றும், அப்படத்திற்கான “அறிவுசார் சொத்து உரிமை” தன்னிடமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் 'சபாஷ் நாயுடு' என்றும், ஹிந்தியில் 'சபாஷ் குண்டு' என்றும் ஆரம்பிக்கப்பட்ட படம் ஆறு வருடங்களுக்குப் பின் மீண்டும் ஆரம்பமானால் அது வரலாறுதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.