“புதுச்சேரி அரசு அனுமதிக்காது!” – தமிழக அரசின் சுற்றுலா கப்பல் குறித்து தமிழிசை கூறுவதென்ன?

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கும், விசாகப்பட்டினத்திற்கும் செல்லும் 796 அறைகளைக் கொண்ட சுற்றுலா சொகுசு கப்பல் போக்குவரத்தை இரண்டு நாள்களுக்கு முன்பு துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில் நேற்று புதுச்சேரியில் தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் கடற்படைப் பிரிவு மாணவர்களின், கடல் சாகசப் பயணம் தொடங்கியது. புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொடங்கிய மாணவர்கள் கடல் சாகச படகு பயணத்தை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடற்படை, தேசிய மாணவர் படை அதிகாரிகள் மற்றும் கடல் சாகச குழுவினர் கலந்துகொண்ட இந்த கடல் சாகசப் பயணத்தில், புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட 60 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு படகில் பயணத்தைத் தொடங்கினர்.

சுற்றுலா கப்பல்

கடலில் 300 கிலோமீட்டர் பயணிக்கும் இந்த குழு புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு சென்று மீண்டும் புதுச்சேரிக்கு திரும்பும். இந்த பயணத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. தொடக்க விழா நிகழ்வுகளுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், “கடல் சாகசப் பயணத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள், கடல் பயணம் செல்வது மட்டுமல்லாமல், கடலோர கிராமங்களில் சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்த இருக்கிறார்கள். அந்த வகையில் ரத்த தான முகாமில் கலந்துகொள்ளுதல், மரங்கள் நடுதல், கடற்கரையை தூய்மைப்படுத்துதல், விழிப்புணர்வு பேரணிகள் நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் இந்த கடல் பயணக்குழவில் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்வதும் மகிழ்ச்சி. பெண்களுக்கு அவர்கள் முன்னுதாரணமாக உள்ளனர். 25 பெண்கள் 20 நாட்களுக்கும் மேல் கடற்பயணம் செய்யும்போது, பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிக பாதுகாப்பும் தேவைப்படும். மாணவர்களுக்கு நமது கடற்படை, உறுதுணையாக உள்ளது. குடியரசு தினத்தில் பிரதமரின் கரங்களால் வழங்கப்படும் சிறந்த அணிவகுப்பிற்கான கோப்பையை, புதுச்சேரி கடற்படைப் பிரிவு பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. புதுச்சேரியில் ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், கடந்த சில தினங்களாக பொது இடங்களில் பல லட்சம் எண்ணிக்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி வருகிறோம்.

பிளாஸ்டிக் பூமிக்கு மிகவும் பாரமாக இருக்கிறது. சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் நிலையில், பிளாஸ்டிக் இல்லாத உலகமே வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் ஆரோக்கியமான பரிசாக இருக்கும். அது தொடர்பாகவும், இந்த மாணவர்கள் குழு, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றவரிடம் “சென்னை-புதுச்சேரி இடையேயான சொகுசு சுற்றுலா கப்பலை தமிழக அரசு துவக்கியிருக்கிறது. அதில் சூதாட்டம் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகள் நடப்பதாக புகார்கள் எழுந்து வருகிறதே?” என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “புதுச்சேரி அரசுக்கு அது தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை. அது தொடர்பான கோப்புகளும் வரவில்லை. அப்படியே அந்த கப்பல் புதுச்சேரிக்கு வந்தாலும், கலாசார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.