ரூ.115 கோடி இழப்பீடு பெற்ற நடிகர்| Dinamalar

லண்டன்:முன்னாள் மனைவி மீதான அவதுாறு வழக்கில், 115 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற, ‘ஹாலிவுட்’ நடிகர் ஜானி டெப், அதை கொண்டாடும் விதமாக பிரிட்டனில் உள்ள இந்திய உணவகத்தில் தன் நண்பர்களுக்கு, 48 லட்சம் ரூபாய் செலவு செய்து விருந்தளித்தார்.
ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், 58, தன் முன்னாள் மனைவியும், நடிகையுமான ஆம்பர் ஹேர்ட், 36, மீது அவதுாறு வழக்கு பதிவு செய்தார். இதன் விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வந்தது. பரபரப்பான இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ஜானி டெப்புக்கு அவரது முன்னாள் மனைவி 115 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஜானி டெப், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கி இருந்தார். இந்த தீர்ப்பை அங்குள்ள தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்தார். இதையடுத்து, பிரிட்டனின் பிர்மிங்காம் நகரில் உள்ள, ‘வாரணாசி’ என்ற பிரபல இந்திய உணவகத்தில் தன் நண்பர்கள் 20 பேருக்கு ஜூன் 5ம் தேதி இரவு விருந்தளித்தார்.

400 பேர் அமர்ந்து உணவருந்தக் கூடிய அந்த உணவகத்தில், ஜானியின் பாதுகாப்பு கருதி மற்ற விருந்தினர்கள் அனுமதிக்கப்படவில்லை. வகைவகையான இந்திய உணவு வகைகளும், மதுபானங்களும் பரிமாறப்பட்டன. இந்த விருந்துக்கு 48 லட்சம் ரூபாய் செலவானது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.