விக்னேஷ் சிவன் பிரஸ்மீட்டில் மிரட்டல்: சென்னை பிரஸ் கிளப் கண்டனம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா திருமணம் நாளை மறுநாள் (ஜூன் 9) நடைபெற உள்ள நிலையில், இன்று விக்னேஷ் சிவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்போது ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், நாளை மறுநாள் இவர்கள் திருமணம் மகாபலிபுரம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் விக்னேஷ் சிவனிடம் பேச முயன்ற போது மக்கள் செய்தி தொடர்பாளர்  சுரேஷ் சந்திரா, அவரையும் அவரது நிறுவனத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாக செய்தியாளர் இது குறித்து சுரேஷ் சந்திராவிடம் கேட்டபோது, அவர் தனது நண்பர்களுடன் இணைந்து செய்தியாளரை மிரட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், விக்னேஷ் சிவன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இன்று (07-06-2022) செவ்வாய்க்கிழமை காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர ஹோட்டலில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றிருந்தார்  புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் ரா.ஆனந்தன்.

செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் இயக்குநர்  விக்னேஷ் சிவனுடன் சில செய்தியாளர்கள் பேச முயற்சி செய்துள்ளனர். அப்போது செய்தியாளர் சந்திப்புக்கு  ஏற்பாடு செய்திருந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, செய்தியாளர் ஆனந்தனிடம், ‘நீ யார்?’ என்று ஒருமையில் கேட்டதைத் தொடர்ந்து நிறுவனம்  குறித்து தகாத வார்த்தை கூறியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மன உளைச்சல் அடைந்த செய்தியாளர் ஆனந்தன் , மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திராவிடம் ,எப்படி  எங்கள் நிறுவனம் குறித்து தவறாக சொல்லலாம்? என கேள்விகள் எழுப்பியுள்ளார். இணக்கமற்ற சூழலில் சுரேஷ் சந்திராவின் உதவியாளர்கள் / நண்பர்கள்  குறிப்பாக நாசர் மற்றும்  தியாகு ஆகியோர் செய்தியாளர் ஆனந்தன் மீது கை வைத்து தள்ளி மிரட்டியுள்ளனர்.

இந்த அத்துமீறலை – அநாகரீக மிரட்டலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.மேலும் பாதிக்கப்பட்ட செய்தியாளர் ஆனந்தன் இது தொடர்பாக சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வ புகார் அளித்துள்ளார். சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

பொதுவாக பல இடங்களில் நிகழ்வுகளில் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள்,மிரட்டல்கள் , அவமதிப்புகள் அதிகரித்து வருவது ஆரோக்கியமான போக்கு அல்ல. பத்திரிகையாளர்கள் / ஊடகவியலாளர்கள் மதிப்புடன் நடத்தப்படுவதும் அவர்களை சுதந்திரமாக கடமையாற்ற விடுவதுமே நல்ல சமுகத்தின் நல்லடையாளம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.