அக்‌ஷய் குமார் பட காட்சிகள் ரத்து: தியேட்டர்களில் ஆளில்லை வரி விலக்கு அளித்தும் தோல்வி

மும்பை: நாடு முழுவதும் தியேட்டர்களில் படம் பார்க்க யாரும் வராததால், அக்‌ஷய் குமாரின் பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.கொரோனா பாதிப்புக்குப் பிறகு இப்போது பல படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நன்றாக ஓடுகின்றன. இந்நிலையில், பாலிவுட்டில் ஸ்டார் நடிகரான அக்‌ஷய் குமாரின் சாம்ராட் பிருத்விராஜ் படம் கடந்த வாரம் வெளியானது. இந்தியில் மட்டுமின்றி, தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு படம் வெளியானது. இப்படத்தைப் பார்த்து பாஜ தலைவர்கள் பலரும் பாராட்டினர். முன்னதாக இப்படத்தின் தலைப்பு பிருத்விராஜ் என்று மட்டுமே இருந்தது. ‘சாம்ராட் பிருத்விராஜ் என தலைப்பை மாற்ற வேண்டும். இந்துத்துவ சாம்ராஜ்ஜியத்தின் ராஜா என்ற வாசகத்தையும் இடம்பெறச் செய்ய வேண்டும்’ என்று இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து அதுபோன்ற மாற்றங்களைச் செய்து படத்தை வெளியிட்டனர். இப்படத்துக்கு உத்தர பிரதசம், மத்திய பிரதேசம் ஆகிய பாஜ ஆளும் மாநிலங்களில் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய அரசின் ஆதரவு இருப்பதால், படம் பெரிய வெற்றிபெறும் என்ற கருத்து நிலவியது. ஆனால், முதல் நாளில் இருந்தே படத்துக்கு கூட்டம் வரவில்லை. ரூ100 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம், ரூ200 கோடி வியாபாரம் ஆனது. ஆனால், ஒரு வாரத்தில் வெறும் ரூ46 கோடிதான் வசூலித்துள்ளது. இந்நிலையில், தியேட்டர்களில் நேற்று பகல் மற்றும் மதியம் காட்சிகளுக்கு இந்த படத்தை பார்க்க யாரும் வரவில்லை. இதனால், நாட்டின் பல தியேட்டர்களில் இந்த படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதே நேரம், இளம் நடிக ரான கார்த்திக் ஆர்யான் நடித்த புஹ்ல் புலய்யா இந்தி படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. பேய் கதை படமான இதைப் பார்க்கவே மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், சாம்ராட் பிருத்விராஜ் படத்தை தயாரித்துள்ள யஷ் சோப்ராவின் யஷ் ராஜ் நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.