கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: மரண தண்டனையை ஆயுள் ஆக குறைத்தது உயர் நீதிமன்றம்

சென்னை: கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த மாற்று சமூகங்களைச் சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி கடந்த 2003-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கண்ணகி மற்றும் முருகேசனுக்கு விஷம் கொடுத்து கொன்று, எரித்துக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2004 ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து, கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருதுபாண்டியன், உறவினர்கள் உள்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், கண்ணகியின் தந்தை துரைசாமி,மற்றும் உறவினர்கள் ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 12 பேருக்கு ஆயுள் தண்டணையும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கிலிருந்து இருவரை பேரை விடுதலை செய்தது.

இந்நிலையில், மரண தண்டனையை உறுதிபடுத்த, வழக்கை கடலூர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. தண்டனையை ரத்து செய்ய கோரி 13 பேர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்து வந்த, நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிறப்பித்த தீர்ப்பில், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உத்தரவிட்டனர்.

கண்ணகியின் தந்தை துரைசாமி, மற்றும் கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், அப்போதைய காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, அவர்களின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

மேலும், அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையையும் உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.துரைசாமியின் உறவினர்கள் ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரை விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.