’குஜராத், உ.பி., மும்பை மற்றும் டெல்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம்’ – அல் கொய்தா எச்சரிக்கை

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சுக்கு பழிவாங்கும் விதமாக குஜராத், உ.பி., மும்பை மற்றும் டெல்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்று அல் கொய்தா தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அல் கொய்தா இன் சப் கான்டினன்ட் (AQIS) என்ற தீவிரவாத அமைப்பின் சார்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 ஆம் தேதியிடப்பட்ட மிரட்டல் கடிதத்தின் விவரம் வெளியாகியுள்ளது.

மிரட்டல் கடிதம் விவரம்: அக்கடிதத்தில், “நபிகள் நாயகத்தையும் அவரது மனைவியையும் இந்திய தொலைக்காட்சியில் ஒரு பெண் மிகவும் இழிவாகப் பேசியுள்ளார். அதனால் உலகில் உள்ள முஸ்லிம்களின் இதயத்திலிருந்து குருதி வழிகிறது. எங்கள் மனங்களில் இப்போது அவரைப் பழிவாங்கும் எண்ணம் மேலோங்கியுள்ளது. முகமது நபியை அவமதிப்பவர்களைக் கொல்வோம். அதற்காக நாங்களும், எங்களது குழந்தைகளும் தற்கொலைப் படைகளாக மாறுவோம். எங்கள் தாக்குதலில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. வீட்டில் இருந்தாலும் இல்லை ராணுவத்தின் பாதுகாப்பு அரணில் இருந்தாலும் நாங்கள் தாக்குவோம். இந்தப் போரில் அனைத்து முஸ்லிம்களும் பங்கேற்க அழைக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது”.

போலீஸ் பாதுகாப்பு: முன்னதாக, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக போலீஸில் புகார் கூறிய நிலையில் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அமைச்சர் விளக்கம்: பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வளைகுடா நாடுகள் பல, தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்நிலையில், நூபுர் சர்மா அரசு அதிகாரி அல்ல என்பதால், அவரது சர்ச்சை கருத்து மத்திய அரசின் நிர்வாகத்தில், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும், வளைகுடா நாடுகளுடனான நல்லுறவு தொடரும் எனவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.