சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2-வது நாளாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாவது நாளாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள். இதன் ஆய்வறிக்கை இந்து அறநிலைத்துறை ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் புகழ் பெற்ற தலமாகும். இக்கோயிலிலுள்ள கனகசபையில் பக்தர்கள் ஏரி சாமி தரிசனம் செய்ய பொது தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதனைக் கண்டித்து பக்தர்கள் தெய்வத்தமிழ் பேரவை மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதனை அடுத்து தமிழக அரசு கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், இந்து அறநிலையத் துறையினர் நடராஜர் கோயிலை ஆய்வு செய்யவிருப்பதாக அத்துறையில் இருந்து கோயில் பொது தேவைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பினர்.

இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்து கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் பொது தீட்சிதர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது அவர்கள் கருத்தை கேட்ட அமைச்சர் ஆய்வுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் நேற்று காலை (ஜூன்.7) சென்னை இந்து அறநிலையத்துறை வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் இணை ஆணையர்கள் பழனி நடராஜன், வேலூர் லக்ஷ்மணன், கடலூர் அசோக்குமார், கடலூர் துணை ஆணையரும் ஒருங்கிணைப்பாளருமான ஜோதி, ஆடிட்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தீட்சிதர்கள் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் தீட்சிதர்கள் அதிகாரிகள் குழுவை தேவ சபைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரன் மற்றும் தீட்சிதர்கள் ஒரு மனுவை அதிகாரிகளிடம் அளித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களது மூதாதையர் கோயிலில் பூஜை புனஸ்காரங்கள் செய்து நிர்வகித்து வருகின்றனர் என்று கூறி கணக்கு காட்ட மறுத்தனர்.

இதனையடுத்து அதிகாரிகள் குழு கோயில் வளாகத்தில் அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் மாலை மீண்டும் கோயிலுக்கு இந்து அறநிலையத்துறை அதிகாரி குழுவினர் சென்றனர். அவர்களுடன் தீட்சிதர்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோர் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கோயிலில் இருந்து வெளியேறினர்.

இதுகுறித்து தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறுகையில் ”உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கோயில் தீட்சிதர்களை யாரும் கட்டுப்படுத்த இது சட்ட ரீதியான குழு அல்ல. சட்டரீதியான குழு வந்தால் தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றார்.
அதிகாரிகள் குழுவினர் சிதம்பரத்தில் தங்கி உயரதிகாரிகள் ஆலோசனை பெற்று இன்று காலை (ஜூன்.8) மீண்டும் அதிகாரிகள் கோயிலுக்கு ஆய்வுக்கு சென்றனர். தீட்சிதர்கள் அவரது வழக்கறிஞர் சிவகுமாருடன் காத்திருந்தனர்.

அதிகாரிகள் குழு கோவிலில் சாமி தரிசனம் செய்தனர் பின்னர் கோவிலை சுற்றிப் பார்த்தனர். பின்னர் அதிகாரிகள் குழுவினர் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியை சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் குழுவினர் தெரிவிக்கையில் எங்களது ஆய்வறிக்கையை இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு தர உள்ளோம். சட்டம் தன் கடமையை செய்யும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.