நடராஜர் கோயில்: “ஒத்துழைக்கவில்லை, தவறான தகவல்களை கூறுகின்றனர்!" – தீட்சிதர்களை சாடும் விசாரணை குழு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக ரீதியான அலுவல் ஆய்வை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த குழுவினர் நேற்று காலை கோயிலுக்கு சென்றனர்.

2014-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான கோயிலின் கணக்கு வழக்குகள் மற்றும் செலவுகள் குறித்த ஆவணங்களை குழுவினர் கேட்டபோது, அவற்றை தர மறுத்த தீட்சிதர்கள், இந்து அறநிலையத்துறையால் தங்களை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர். அதனால் நேற்று திரும்பிச் சென்ற குழுவினர், இரண்டாவது நாளாக இன்று காலை 10.45 மணிக்கு வருகை தந்தனர்.

இந்து அறநிலையத்துறை விசாரணைக் குழுவினர்

நடராஜர், பெருமாள் சந்நிதிகளில் தரிசனம் செய்த அந்தக் குழு, கோயில் வளாகத்தை சுற்றிப்பார்த்துவிட்டு மதியம் புறப்பட்டுச் சென்றது. அதன்பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் வந்தவர்கள், தீட்சிதர்களிடம் ஆவணங்கள் தொடர்பாக பேசினார்கள். ஆனால் தங்களின் பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் இன்று வரவில்லையென்றும், அதனால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் தீட்சிதர்கள் தெரிவித்துவிட்டனர்.

அதையடுத்து சக விசாரணை குழு அதிகாரிகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், “இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள குறைபாடுகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்வதற்காக எங்கள் அதிகாரிகள் குழுவுடன் வந்தோம். இங்கிருக்கும் ஆவணங்களை பார்வையிடவும், அவற்றை எங்களிடம் ஒப்படைக்கவும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டோம். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

சிதம்பரம் தீட்சிதர்கள்

அதனால் அடுத்தக்கட்டமாக சட்டப்பூர்வமான நடவடிக்கை என்னவோ அவற்றை மேற்கொள்ளவிருக்கிறோம். இந்த இரண்டு நாள்கள் வருகையில் நாங்கள் செய்தது, தீட்சிதர்கள் தரப்பில் ஒத்துழைப்பு கொடுக்காதது… என அனைத்தையும் ஆணையரிடம் அறிக்கையாக சமர்ப்பிப்போம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக் கோயில் என்று எங்கள் தரப்பில் சொல்கிறோம். இது பொதுக் கோயில் என்பது உண்மையான ஒன்று. இந்து சமய அறநிலைய சட்டம் 1959-ன்படி இந்தக் கோயிலை ஆய்வுசெய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் தீட்சிதர்கள் தரப்பில் அதனை மறுக்கின்றனர்.

நாங்கள் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட குழு இல்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் சட்ட முறைப்படி இந்து அறநிலையத்துறை ஆணையரால் அமைக்கப்பட்டு, அனுப்பப்பட்டிருக்கும் குழு. அந்த குழுவின் சார்பாக ஆவணங்களை இரண்டு நாள்களாக நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு அவர்கள் முறையான ஒத்துழைப்பு தரவில்லை. அதனால் சட்டப்படி ஆய்வுசெய்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்.

தீட்சிதர்கள் தரப்பில் 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் சட்டத்தை மேற்கோள்காட்டி நீதிமன்ற அவமதிப்பு என்று கூறுவது தவறான தகவல். இது தொடர்பான அனைத்து நகர்வுகளையும் சட்டப்பூர்வமாகத்தான் எடுத்திருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.