மதுரை ஆதீனத்தை மிரட்டினால்..? சேகர் பாபுவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

மதுரை ஆதினத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்.என்று திருச்சி புத்தூரில் நடைபெற்றது பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மத்தியில் பா.ஜ.க தலைமையிலான மோடி அரசு பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதையடுத்து மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில், பாஜகவினர் தொடர் பிரசார நிகழ்வை முன்னெடுத்துவருகின்றனர்.

அந்தவகையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பாஜகவின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி புத்தூரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புது காஸ்டியூம் போட்டுள்ளார். மீண்டும் காவி வேட்டி கட்டத் துவங்கியுள்ளார். முதல்வரின் வழிகாட்டுதலால் பொறுமையாக இருக்கிறோம். நாங்கள் பதுங்கி இருப்பதை பயமாக கருதக் கூடாது என தொடர்ந்து மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார். மதுரை ஆதினத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும். ஆதினங்களை மிரட்டுவது திமுக அழிவுக்கு காரணமாக இருக்கும்.
   

சிதம்பரம் கோவில் விவகாரத்திலும் அமைச்சர் சேகர் பாபு தலையிடுகிறார். பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் போட்டிபோட்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். நியூட்ரீசன் திட்டத்தில் கமிஷன் நடைபெற்றுள்ளது. அதை ஆதாரத்தோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் ஒரு கட்சியாக திமுக வளர்ந்துள்ளது.” என்றார்.

 மேலும் அவர் பேசுகையில்; ஜி.எஸ்.டி.யில் எவ்வளவு நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியவில்லை. பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, எங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை தாருங்கள் என்று கேட்டார். அதற்கு பிரதமர் ஜி.எஸ்.டி. நிலுவை தொகை ரூ.9 ஆயிரத்து 602 கோடியை நாங்கள் கொடுத்து விட்டோம் என்று மேடையிலேயே பொதுமக்கள் முன்பு கூறிவிட்டார்.

 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகள் 10 தனியார் மருத்துவ கல்லூரிகளை நடத்தி வருகின்றனர் – 2006 முதல் 2011 வரை ஜிடுசியல் என்குயரி போட்டால் இன்று கோபாலபுரத்தில் உள்ள பாதிப்பேர் சிறைக்கு செல்ல வேண்டும்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்தான் மருத்துவ சீட் 66 ஆயிரம் சீட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை-எளிய மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக வேண்டும் என்பதே நமது இலக்கு. பா.ஜ.க. புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை கண்டிப்பாக திணிக்காது. அமைச்சர் பொன்முடி விருப்பம் உள்ளவர்கள் இந்தியை தேர்வு செய்து படிக்கலாம் என்று கூறி வருகிறார். புதிய கல்விக் கொள்கையில் என்ன உள்ளதோ அதை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு தான் தமிழகத்தின் கல்வி கொள்கை என்று கூறி வருகின்றனர். இங்கு உள்ள அமைச்சர்கள் அனைவருமே தமிழகத்தை தாண்டி எங்குமே செல்ல மாட்டார்கள்.

கச்சத்தீவை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும். பாஜக கச்சத்தீவை மீட்கும். 18 கோடி தொண்டர்கள் பா.ஜ.க.வில் உள்ளனர். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக கட்சி பா.ஜ.க.தான். திமுக செய்யும் ஒவ்வொரு ஊழல்களையும் மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வைக்கப்போகிறோம். 2024-ம் ஆண்டு கண்டிப்பாக பா.ஜ.க.வின் எம்.பி. தான் திருச்சியில் இருப்பார் என்றார்.
 

இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகர், புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் மாநகர துணைத்தலைவர் ஜெயகர்ணா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.கூட்டத்தில் கருப்பு முருகாணந்தம், சிவசுப்பிரமணியன், முன்னாள் தலைவர் பார்த்திபன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ்.பி.சரவணன் மற்றும் நிர்வாகிகள் கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

திருச்சியில் திராவிட கட்சிகளின் கூட்டத்திற்கு இணையாக முன்பெப்போதும் இல்லாத வகையில் கார், வேன், இருசக்கரங்களில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக திருச்சி மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து வானவெடிகள் முழுங்க பொதுக்கூட்டத்தை அமர்க்கலப்படுத்தினர். இந்தப் பொதுக்கூட்டத்தால் மாநகரின் முக்கிய பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   

கடந்த காலங்களில் பாஜக பொதுக்கூட்டம் என்றால் அங்கொன்றும், இங்கொன்றும் என நூற்றுக்கணக்கில் கூடிய கூட்டத்தின் வரலாற்றை தகர்த்து பிரம்மாண்டமாக சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கூட்டி அசத்தினர் பாஜகவினர்.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.