`உதறுவாதம்' பற்றி தெரிந்து கொள்வோம்! | முதுமை எனும் பூங்காற்று #Parkinson's

இது மூளை சம்பந்தப்பட்ட நோயா?

ஆம். இதை நரம்பு மண்டலக் கோளாறு (Neuro degenerative disorder) என்று கூறலாம். இத்தொல்லை சிறிய அளவில் ஆரம்பித்து பல வருடங்களில் படிப்படியாக அதிகரித்து உடலின் செயல் திறனைக் குறைத்து மரணத்தில் முடிவடையும்.

நோய் வரக் காரணம் ?

மூளையில் உள்ள டோபாமையன் எனும் திரவம் குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. ஆனால் எதனால் இத்திரவம் குறைகிறது என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை . இந்நோய் சுமார் 80% அளவிற்கு திரவம் குறைந்த பின்னர் தான் இந்நோயின் அறிகுறி தோன்றும்.

Representational Image

யாருக்கெல்லாம் இந்நோய் வர வாய்ப்பு அதிகம் உண்டு ?

  • முதுமை

  • தலைக்காயம்

  • சுமார் 15- 20% நோயாளிகளுக்கு பரம்பரையாக வரலாம்

இந்நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன ?

  • மெதுவாக செயல்படுவது

  • சதை இறுக்கம்

  • நடுக்கம்

  • நிலை தடுமாறுதல்

    இந்நோயின் அறிகுறிகள் முதுமையில் மெதுவாக தோன்றுவதால் சில சமயங்களில் முதுமையின் விளைவுக்கும் இந்நோய்க்கும் அதிக வித்தியாசம் காண முடிவதில்லை.

உடல் மெதுவாக செயல்படுவதினால் என்ன தொல்லைகள் ஏற்படலாம்?

  • ஒரு காரியத்தை செய்வதற்கு தாமதம் ஏற்படும். உதாரணம்: ஒரு பேனாவை எடுத்து எழுதுவதற்கு ஒருவர் கையை மெதுவாக எடுத்து விரல்களை மடக்கி ஒரு பேனாவை பிடிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும்.

  • நடப்பதற்கு சிரமப்படுதல். காலை சிறு சிறு அடியாக எடுத்து வைத்து மெல்ல மெல்ல தள்ளாடி நடப்பது. ● உடை உடுப்பது, உணவு உண்பதற்கு அதிக நேரம் தேவைப்படும் • குரல் வளம் குறையும்

  • கையெழுத்து சிறியதாக மாறும்

  • முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது

சதை இறுக்கத்தை பற்றி சற்று விவரம் தேவை?

உடலில் உள்ள தசைகள் எல்லாம் இருக்கமுற்று மரக்கட்டை போல் ஆகிவிடும். சதை இறுக்கத்தால் ஒரு இடத்தில் உட்கார்ந்தால் எவ்வித அசைவும் இன்றி மணிக்கணக்கில் அப்படியே உட்கார்ந்து கொண்டேயிருப்பார்கள். நிற்க வைத்தாலும் அதே நிலை தான். தான் செய்து கொண்டு இருக்கும் வேலைகளை எந்த காரணமுமின்றி திடீரென்று நிறுத்தி விடுவார்கள். உதாரணம்: உடை உடுத்தும் போதும், உணவு உண்ணும் போதும்.

நடுக்கம் எவ்வாறு நோயாளியை பாதிக்கிறது?

இந்நோயின் முக்கிய அறிகுறியே நடுக்கம் தான். இது மெதுவாக கையில் ஏற்பட்டு படிப்படியாக உடல் முழுவதும் தோன்றும். தொடக்கத்தில் கையில் ஒரு மாத்திரையை வைத்து எப்பொழுதும் உருட்டிக்கொண்டு இருப்பதுபோல் (pill-rolling motion) செய்து கொண்டிருப்பார்கள். இந்த நடுக்கம் ஏதாவது ஒரு வேலையை செய்யும் பொழுது நின்று விடும். சுமார் 30% நோயாளிகளுக்கு நடுக்கம் இல்லாமலேயே இருக்கும். நாக்கில் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்.

நிலை தடுமாறுதல் பற்றி விவரம் தேவை?

உதறுவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களால் சரியாக நடக்க முடியாது, அவர்களுக்கு தடுமாற்றம் அதிகமாக இருக்கும். அதனால் அடிக்கடி கீழே விழ வாய்ப்புண்டாகும்.

எந்த வயதில் இந்நோய் அதிகம் ஏற்படுகிறது?பொதுவாக அறுபது வயது கடந்தவர்களிடம் தான் இந்நோயைக் காணமுடிகிறது. சமீப காலத்தில் இளம் வயதினருக்கும், சுமார் நாற்பது வயதிலேயே இந்நோய் சிலருக்கு வருகிறது. அதற்கு சரியான காரணம் தெரியவில்லை.

Representational Image

உணவு பத்தியம் ஏதாவது உண்டா?

இப்படிதான் சாப்பிட வேண்டும் என்ற வரையறை ஏதுமில்லை. சிலருக்கு இறைச்சி, புரதம் அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்ளும் போது உடல் தசைகளின் இறுக்கம் சற்று அதிகம் ஏற்படலாம். இவர்கள் அசைவ உணவைக் குறைத்துக் கொண்டு சைவ உணவை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

மலச்சிக்கலுக்கும் இந்த நோய்க்கும் தொடர்பு உண்டா?

இந்நோய் ஆரம்பம் ஆவதற்கு சுமார் 5 10 ஆண்டுகளுக்கு முன்பே மலச்சிக்கல் தோன்றும். இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தால், உதறுவாதத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டு தக்க சிகிச்சையளிக்க முடியும். முதுமையில் சத்தான உணவு சாப்பிடுவது குறைவதாலும், போதிய உடற்பயிற்சி இல்லாததாலும், பல மருந்துகளாலும் மலச்சிக்கல் அதிகம் வர வாய்ப்புண்டு. பார்க்கின்சன்ஸ் நோய்க்காக எடுது;துக் கொள்ளம் லிவோடோபா மருந்தின் செயல்பாடு, மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

Representational Image

உதறுவாதம் எனும் பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாசனை அறியும் சக்தி குறையுமா?

ஓரளவிற்கு வாசனை அறியும் சக்தி குறையும். அதனால் உண்ணும் உணவின் அளவும் குறையக் கூடும்.

இந்நோய்க்கு தக்க சிகிச்சை உண்டா?

இந்நோய்க்கு பல சிகிச்சை முறைகள் உண்டு. அதாவது மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, இயன் முறை சிகிச்சை மற்றும் மாற்று சிகிச்சை முறைகள்.

மருத்துவ சிகிச்சை

பாதிக்கப்பட்ட மூளையின் திசுக்களை எந்த வித மாத்திரைகளாலும் பழைய நிலைக்கு கொண்டு வருவதோ அல்லது தடுத்து நிறுத்தவோ முடியாது. ஆனால் மருந்துகள் மூலம் நோயின் தொல்லைகளிலிருந்து ஓரளவிற்கு நிவாரணம் கிடைக்கும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும், வெவ்வேறு மாதிரியான சிகிச்சை முறை தேவைப்படலாம். இது நோயாளியின் வயது, செய்யும் வேலை, பிற நோய்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும்.

சமீபத்தில் அப்போமார்பின் (Apomorphine) எனும் மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். ஆனால் இதை தினமும் தேவைக்கேற்றார் போல பல முறை செலுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். அனேகமாக நீரிழிவு நோய்க்கு எப்படி இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்கிறோமோ அதைப் போல இந்த ஊசியும் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். இந்த ஊசியின் மூலம் குறுகிய காலத்தில் நல்ல பலன் கிடைக்கும், ஆனால் விலை சற்று அதிகம்.

இயன்முறை சிகிச்சை

உதறுவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரைகளை விட உடற்பயிற்சில் மிகவும் அவசியம் என்றால் அது மிகையாகாது. இந்நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு சில காலத்திற்கு உடற்பயிற்சியே போதுமானது. நோய் தீவிரம் அடையும் போது இயன்முறை சிகிச்சை நிபுணர் ஆலோசனைப் படி உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும்.

Representational Image

அறுவை சிகிச்சை

மருந்துகள் மூலம் குணம் அடையாதவர்கள் மற்றும் மருந்துகளின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையில் செய்யும் அறுவை சிகிச்சை மூலம் சற்று குணம் அடைய வாய்ப்புண்டு. ஆழ்மூளை தூண்டல் அறுவை சிகிச்சை (Deep brain stimulation) சதை இறுக்கத்தையும், நடுக்கத்தையும் குறைக்க மிகவும் உதவும்.

இந்நோயைக் கண்டு அறிய என்ன பரிசோதனைகள் தேவைப்படும்?

உதறுவாதத்தை சரியாக கண்டறிவதற்கு இன்னமும் முழுமையான பரிசோதனைகள் இல்லை. மருத்துவர்களால் முழுமையாக உடலை பரிசோதனை செய்வதின் மூலமே இந்நோயை கண்டுபிடிக்க முடியும்.

  • CT, MRI ஸ்கேன் பரிசோதனையில் எந்த வித மாற்றமும் இருக்காது.

  • PET மற்றும் SPECT ஸ்கேன் பரிசோதனையில் ஓரளவு மாற்றம் தெரியும்.

  • இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் உதறுவாததத்தோடு சம்பந்தப்பட்ட தொல்லைகளை அறிவதற்கே உதவும்.

இந்நோயினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சற்று விவரம் தேவை?

உதறுவாதம் ஆரம்பித்து, சில ஆண்டுகளுக்குப் பின் நோயின் தன்மை தீவிரம் அடைந்து பல தொல்லைகள் வர வாய்ப்புண்டு. உதாரணம்: நிமோனியா, படுக்கப் புண், சிறுநீர் தாரையில் பூச்சித் தொல்லை, எலும்பு முறிவு. இத்தகைய தொல்லைகள் எல்லா நோயாளிகளுக்கம் ஏற்படும் என்ற கட்டாயம் இல்லை. இவைகளை ஓரளவிற்கு தக்க வைக்க முடியும். முடிந்தளவிற்கு சுயமாகவே மற்றவர்களை சார்ந்திருக்காமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஓரேடியாக படுத்து விட்டால் என்ன நேரலாம் என்பதற்கு கீழ்க் காணும் பழமொழியே ஒரு சான்றாகும்.

” நடந்தால் நாடும் உறவாடும்

படுத்தால் பாயும் பகையாகும்”

Representational Image

உதறுவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினர் எப்படி கவனித்துக் கொள்வது?

குடும்பத்தார் செய்ய வேண்டிய சில வழிமுறைகள்:

  • மருத்துவர் ஆலோசனைப்படி மருந்தை நேரப்படி கொடுக்க வேண்டும்.

  • இந்நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளினால் முதியோருக்கு பக்க விளைவுகள் வர வாய்ப்பு இருப்பதால் அருகிலிருந்து கவனமாக கண்காணிக்க வேண்டும்.

  • மூச்சை உள் இழுத்து, வெளியில் விட பயிற்சி அளிக்க வேண்டும்.

  • நடக்கும் பொழுது உதவியாளர் துணையுடன் நடக்க உதவ வேண்டும் அல்லது உபகரணங்களின் (கைத்தடி, வாக்கர்) உதவியுடன் நடக்கச் சொல்ல வேண்டும்.

  • கட்டிலின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் போட்ட படுக்கையில் படுக்க வைத்து கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த உணவுகளையும் பானங்களையும் சாப்பிடக் கொடுக்க கூடாது மற்றும், குளிப்பதற்கு மிகவும் குளிர்ந்த அல்லது அதிக சூடான நீரை உபயோகப்படுத்த கூடாது.

  • அவர்கள் பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும், படிப்பதற்கும் உற்சாகப்படுத்தி உதவ வேண்டும். உறவினர்களும் உடன் இருந்து உண்பது மிகவும் சிறந்தது.

  • உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டும்.

  • தினசரி வேலைகளை தாங்களே செய்ய முடியாமல் சிரமப்படும் பொழுது, உறவினர்கள் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

  • படுக்கையிலேயே படுத்திருக்காமல் எழுந்த சிறு சிறு வேலைகளைச் செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.

மருத்துவத் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில் உதறுவாதத்தை பூரணமாக குணப்படுத்தக் கூடிய சிசிச்சை முறைகள் அவசியம் வரும். நம்பிக்கையோடு அந்த பொன்னான நாளை ஆவலுடன் எதிர்ப்பார்ப்போம் !

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.