கெட்டிமேளம் கொட்டியாச்சு… தாலி கட்டியாச்சு… மாமல்லபுரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலம்

தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையாக கடந்த சில வருடங்களாக அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நயன்தாரா. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த 'நானும் ரௌடிதான்' படத்தில் நடித்த போது அப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா. கடந்த ஆறேழு வருடங்களாக காதலித்து வந்து இந்த ஜோடி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தங்கள் ஜோடிப் புகைப்படங்களை பதிவிட்டு மற்றவர்களை பொறாமைப்பட வைத்தனர். எப்போது திருமண செய்வீர்கள் என பலரையும் கேட்க வைத்தனர்.

கொரோனா காலக்கட்டத்தில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்தனர். இந்நிலையில் சென்னைக்கு அருகில் மகாபாலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் இன்று(ஜூன் 9) வெகு விமரிசையாக பிரமாண்டமாய் நடந்தது. கடற்கடர ஓரம் திறந்த வெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 9 மணிக்கு மேல் இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன். இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.

மூன்றுநாள் திருமண நிகழ்ச்சி
முன்னதாக நேற்று முன்தினம் திருமணத்திற்கான மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று வரவேற்பு நிகழ்ச்சியும், இன்று திருமண நிகழ்வும் நடந்தன. நயன்தாராவின் மேக்கப்பிற்காக மும்பையில் இருந்து மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வரவழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டவர்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்றியவர்கள் நயன்தாராவிற்கு மேக்-அப் போட்டனர்.

நிறைய கட்டுப்பாடுகள்
இந்த திருமணத்திற்கு வெளியாட்கள் யாரும் பங்கேற்க அழைப்பு இல்லை. திருமணத்திற்கு வருபவர்கள் அலைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதி அளிக்கப்பட்டனர். மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் பாரம்பரிய உடையணிந்து வரும்படி மணமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான நபர்கள் அப்படியே பங்கேற்றனர். திருமணம் நடைபெறும் கடற்கரை விடுதியை சுற்றி 100க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த திருமண நிகழ்வு ஓடிடி ஒன்றில் வெளியாக உள்ளது. இதற்காக பெரும்தொகை நயன் – விக்கி தம்பதியருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திருமணத்தை இயக்குனர் கவுதம் மேனன் தான் இயக்குகிறார். மிகவும் ஆடம்பரமாக பிரம்மாண்டமாய் திருமணத்தை நடத்தி உள்ளனர்.

ரஜினி, ஷாரூக் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பு
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஹிந்தி நடிகர் ஷாரூக்கான், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் அட்லீ, எஸ்.ஜே.சூர்யா, கார்த்தி, சரத்குமார், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், உதயநிதி, ஷாலினி அஜித், நெல்சன் திலீப்குமார், அனிருத், போனிகபூர், வசந்த் ரவி, திவ்யதர்ஷினி(டிடி) உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

வார்த்தைக்கு வார்த்தை நயன்தாராவை என் தங்கமே… தங்கமே… என்று அழைக்கும் விக்னேஷ் சிவன் ஒருவழியாக தனது தங்கம் நயன்தாராவை கரம் பிடித்துவிட்டார். இவர்களது இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.