சினிமாவில் ஜெயிக்க இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன்: அருண் விஜய்

அருண் விஜய் நடித்துள்ள யானை படம் வருகிற 17ம் தேதி வெளிவருகிறது. இதனை அவரது மைத்துனர் ஹரி இயக்கி உள்ளார், பிரியா பவானி சங்கர் ஹீரோயின். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வெளியாவதை தொடர்ந்து அருண் விஜய் அளித்த பேட்டி:

இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படம். கோவிட் தொற்று காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் படமானது. எனது படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம். 3 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரண்டு சண்டை காட்சிகள் படத்தில் இருக்கும். அதுவும் யதார்த்தமாக இருக்கும். உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு எடுக்கப்பட்ட காட்சிகள் அவை.

சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்களுக்கான இடத்தை பிடித்து விட்டீர்களா என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். எனது மைத்துனராக இருந்தாலும் ஹரியே என்னை ஹீரோவாக இப்போதுதான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். எனது பயணம் இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது.

என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தபோது இந்த படம் தவறு செய்து விட்டால் நான் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்ப வேண்டும் என்கிற பயம் இருந்தது. ஆனால் அந்த படம் எனது பாதையை திசை மாற்றியது. இப்போது மக்கள் மனதில் எனக்கென தனி இடத்தை பிடித்திருந்தாலும் ஒரு முழுமையான வெற்றிக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த படத்திற்கு பிறகு எனது தயாரிப்பில் உருவாகி உள்ள சினம், பார்டர், அக்னி சிறகுகள் படங்கள் அடுத்தடுத்து வெளிவருகிறது. இந்த ஆண்டு இதுவரை புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. யானை ரிலீசுக்கு பிறகே புதிய படங்களை ஒப்புக்கொள்ள இருக்கிறேன். என்கிறார் அருண் விஜய்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.