பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய வழக்கு: தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய வழக்கில், தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா என்கிற ICAMA பாட்சா. இவரது கூட்டாளிகள் அதே மாவட்டத்தில் உள்ள இலந்தனகுடியைச் சேர்ந்தவர் ஜஹபர் அலி. இவர்களது கூட்டாளிகள், கோவையைச் சேர்ந்த முகமது ஆஷிக், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த முகமது இர்பான், சென்னை அயனாவரம் ரஹ்மத். கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே காரில் வந்த இவர்கள் 5 பேரையும் காவல் துறையினர் மடக்கி விசாரித்த போது ஏர்கன் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். ஏர் பிஸ்டல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
image
சாதிக் பாட்சா, கிளாபா பார்ட்டி ஆப் இந்தியா, கிளாபா ப்ரண்ட் ஆப் இந்தியா, ஐஎஸ்ஐ (Intellectual students of India) ஆகிய அமைப்புகளை தொடங்கி, பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கையில் எடுத்து விசாரிக்க தொடங்கியது. அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் மயிலாடுதுறையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அடிப்படையாக வைத்து டெல்லி என்ஐஏ வழக்கு பதிவு செய்தது.
இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சென்னை உட்பட 8 இடங்களிலும், பாண்டிச்சேரி காரைக்கால் பகுதியில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் இவர்கள் சென்னையில் மண்ணடி பகுதியில் சாதிக் பாஷா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் மண்ணடி பகுதியில் தங்கியிருந்த வீட்டிலும், தனியார் நிறுவனம் ஒன்றிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
image
மேலும் அண்ணாசாலை எல்ஐசி கட்டிடம் எதிரில் பழைய வணிக வளாகம் ஒன்றில் சாதிக் பாஷா அலுவலக ஒன்றை வாடகைக்கு எடுத்து இருந்துள்ளார். இதனை அறிந்து அங்கு கொச்சின் என்ஐஏ எஸ்பி தர்மராஜன் தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ரியல் எஸ்டேட் தொழில் நடப்பதாக கூறியும், சாதிக் பாஷா நடத்தி வந்த தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு அலுவலகமாகவும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இங்கு என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஹார்டுடிஸ்க், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், துண்டு பிரசுரங்கள், தற்காப்பு கலைக்கான பயிற்சி கொடுக்கப்பட்டு தொடர்பான ஆவணங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சோதனைக்கு பிறகு அலுவலகத்திற்கு என்ஐஏ அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். அதில் “என்ஐஏ வழக்கு தொடர்பாக இந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அலுவலக சாவி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்” என்று என்ஐஏ அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.
image
இதில் குற்றம் சாட்டப்படும் சாதிக்பாட்சா மக்கள் நீதி பாசறை என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்து தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த மக்கள் நீதி பாசறை தற்போது பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. icama என்ற தற்காப்பு கலை அகாடமி நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் பலருக்கும் தற்காப்பு கலை கற்க வந்தவர்களை ISIS தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதற்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க… நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் : தாலி எடுத்து கொடுத்த ரஜினிகாந்த்? – வெளியான தகவல்
மேலும் சாதிக் பாட்ஷாவை ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மிரட்டிய விவகாரம் தொடர்பாக, ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் மத்திய உளவுத்துறை அமைப்பால் தீவிரமாக கண்காணிக்கபடும் 72 பேர் பட்டியலிலும் சாதிக் பாட்ஷாவையும் திவிரமாக அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
image
இந்நிலையில் சாதிக்பாட்சா மீது பெரியமேடு, ஆயிரம் விளக்கு, வடக்கு கடற்கரை காவல் நிலையம் என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்பான 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியது.
மேலும் அறுபத்தி எட்டு லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தது. ஏற்கனவே பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தொடர்பாக தீவிரமாக மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அந்த அமைப்பு தொடர்புடைய உறுப்பினரான சாதிக்பாட்சா வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தீவிர சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.