மழையில் நனைந்த சாய்பல்லவி : குடைபிடித்த ராணா

தெலுங்கில் ராணா, சாய்பல்லவி, பிரியாமணி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் விராட பர்வம். வேணு உடுகுலா என்பவர் இயக்கியுள்ள இந்த படம் கொரோனா முதல் அலைக்கு முன்பே கிட்டத்தட்ட தயாராகி அப்போதே ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு இப்போதுதான் கால நேரம் கனிந்து வந்திருக்கிறது. வரும் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது விரட்ட பர்வம்.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சாய்பல்லவி, ராணா ஆகியோர் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஒரு திறந்தவெளி மைதானத்தில் மேடை அமைத்து நடந்த திட்டமிட்டனர். அதன்படி ராணா, சாய்பல்லவி உள்ளிட்ட படக்குழுவினரும் விழா மேடைக்கு வந்து விட்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அப்போது ஏற்பட்ட மழை மற்றும் காற்று காரணமாக அங்கே டிரைலரை திரையிடுவதற்காக வைத்திருந்த எல்சிடி திரை கீழே சாய்ந்து உடைந்தது. நல்லவேளையாக அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் விழா ரத்தானது.

இருந்தாலும் அவ்வளவு தூரம் வந்துவிட்ட பிறகு ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதால் மழையையும் காற்றையும் பொருட்படுத்தாமல் சாய்பல்லவியும், ராணாவும் ரசிகர்களிடம் சில நிமிடங்கள் பேசினர். குறிப்பாக சாய்பல்லவி கூட்டத்தினரை பார்த்து மிகவும் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ராணா வேகமாக ஒரு குடையை வாங்கி சாய்பல்லவிக்கு அவர் பேசும் வரை பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். சாய் பல்லவியின் ரசிகர்கள் மீதான பற்றும் ராணாவின் இந்த நெகிழ்வான செயலும் சோசியல் மீடியாவில் தற்போது ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.