முதுநிலை மருத்துவ கல்வி காலியிடங்கள் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு| Dinamalar

புதுடில்லி : முதுநிலை மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்கள் குறித்து, 24 மணி நேரத்திற்குள் மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டு முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு கவுன்சிலிங் கடந்த மாதம் முடிவடைந்தது. இதில் காலியாக உள்ள இடங்களை சிறப்பு கவுன்சிலிங் வாயிலாக நிரப்ப உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு நடந்து கவுன்சிலிங் முடிந்துள்ளது. இதில் ஒரு இடம் கூட காலியாக விடக் கூடாது. இதை செய்ய வேண்டியது மருத்துவ கவுன்சிலின் கடமை. ஒவ்வொரு கவுன்சிலிங் முடிந்த பிறகும் இதே பிரச்னை உள்ளது.நாட்டில் டாக்டர்களுக்கு தேவை அதிகமாக இருக்கும் போது, மருத்துவ படிப்பிற்கான இடங்களை காலியாக விடுவது ஏன் என தெரியவில்லை.
இதனால் மாணவர்களும், பெற்றோரும் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்தாண்டு மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விபரங்களை, 24 மணி நேரத்திற்குள் மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் வழங்க வேண்டும். காலியாக உள்ள இடங்கள் ஏன் நிரப்பப்படாமல் உள்ள என்பது குறித்து, மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.