Presidential Election: குடியரசுத் தலைவர் தேர்தல் எப்போது?- தேதியை அறிவித்தது ஆணையம்!

நாட்டின் 14 ஆவது குடியரசுத் தலைவராக, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். இவரது ஐந்தாண்டு பதவிக் காலம் வரும் ஜுலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது.

இதனையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:

நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்களை ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதி வரை வேட்பாளர்கள் தாக்கல் செய்யலாம். ஜுன் 30 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூலை 2 ஆம் தேதி கடைசி நாள்.

ஜூலை 18 ஆம் பதிவாகும் வாக்குகள், ஜூலை 21 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். மாநிலங்களவை தலைமை செயலாளர் பிரமோத் சந்திர மோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற இரு அவைகள் மற்றும் மாநில சட்டமன்றங்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் மொத்தம் 776 எம்பிக்கள், 4,120 எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.