திருப்பி அனுப்பப்பட்டது எதிர்ப்பையும் மீறி புதுச்சேரிக்கு சென்ற சொகுசு கப்பல்!

சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுச்சேரிக்குள் வர அனுமதி வழங்கப்படாத நிலையிலும் இன்று காலை புதுச்சேரி கடற் எல்லைக்குள் வந்த சொகுசு கப்பல் கடலோரக்காவல் படை அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து திரும்பி சென்றது.
சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் நிறுவனத்தின் சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். ‘கோர்டிலியா குரூஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டம் செயல்படுத்தப்பப்பட்டு வருகின்றது.
இதனிடையே புதுச்சேரிக்கு அந்த சொகுசு கப்பல் வந்து செல்லும் என்ற தகவல் வந்த நிலையில், அதில் சூதாட்டம் உள்ளிட்ட கலாச்சார சீர்கேடான விஷயங்கள் உள்ளது எனக்கூறி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும் இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது கலாச்சார சீரழிக்கும் எந்த அம்சங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சென்னையில் இருந்து புறப்படும் சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வந்து செல்ல இதுவரை அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

image
இந்த நிலையில் கடும் எதிர்ப்பையும் மீறி சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் இன்று அதிகாலை புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் கடற்கரையில் இருந்து 5 நாட்டிக்கல் மைல் தூரம் நடுக்கடலில் நின்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கடலோரக்காவல் படை ரோந்து கப்பலில் சென்ற அதிகாரிகள் புதுச்சேரி கடற்பகுதிக்கு அப்பால் இந்திய கடல்பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டு 10 நாட்டிக்கல் மைல் தூரம் வரை திரும்பி சென்றது.
இந்த சொகுசு கப்பல் கரைப்பகுதிக்கு வந்து செல்லும் வகையில் புதுச்சேரியில் துறைமுகம் ஆழமான பகுதி இல்லை. ஒரு வேலை அனுமதியளித்தால் அதிலிருந்து பயணிகளை சிறிய கப்பல் மூலம் கொண்டுவரவும், ஏற்றிச்செல்லவும் முடியும். அப்படி இல்லாத பட்சத்தில் நடுக்கடலில் நிற்கும் கப்பல் அப்படியே பயணிகளை சுற்றி காட்டிவிட்டு செல்லவும் மட்டுமே வாய்ப்புள்ளது. அனுமதியை மீறி புதுச்சேரி கடற்கரை பகுதிக்கு சொகுசு கப்பல் வந்ததால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.