முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு கோரிய மனு – உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 1456 இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 1,456 இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரி மருத்துவர்கள் சிலர் உச்ச நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்ஆர் ஷா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இரு தினங்களுக்கு முன்பு நடந்த விசாரணையின்போது, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 1,456 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களுக்கான இடங்கள் உரியமுறையில் ஒதுக்கி தரப்படவில்லை எனில் நீதிமன்றமே தலையிட்டு உத்தரவிட நேரிடும் என எச்சரித்திருந்தனர். மேலும், இந்த வழக்கில் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு மருத்துவ கவுன்சிலிங் கமிட்டிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
image
இதனிடையே, நேற்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி இவ்வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி கூறுகையில், “40 ஆயிரம் இடங்களை கொண்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 1,456 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. அதிலும், ஏற்கனவே மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வுகளில் 8-9 சுற்று கலந்தாய்வு நடத்தபட்ட பின்னரே சில நான்- கிளினிக் (Non Clinic) படிப்புகளுக்கான இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், இதற்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்ப, கால அவகாசம் தேவைப்படும். இது, இந்த கல்வியாண்டில் பாதிப்பையும், கால விரயத்தையும் ஏற்படுத்தும். இது, பொது சுகாதாரத்தில் பாதிப்பை உருவாக்கிவிடும். எனவே, சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.