சென்னை: ரகசிய திருமணம்… ஆபாச தொடர்கதை – பட்டதாரி பெண்ணை ஏமாற்றிய இளைஞர் சிக்கியது எப்படி?!

சென்னை, கொளத்தூர் பகுதியில் வசித்து வருபவர் கவிதா (37) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்கிறார். கடந்த 2020-ம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த விக்ரம் என்பவர் கவிதாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் பழகிவந்திருக்கின்றனர். இந்த நிலையில் கவிதாவை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் விக்ரம். பின்னர் ஆசைவார்த்தைகளைக் கூறி அவரை ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார்.

திருமணம்

இதையடுத்து விக்ரமின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால் கவிதா அவரைப் பிரிந்தார். அதனால் கவிதாவை பழிவாங்க திட்டமிட்ட விக்ரம், பத்து லட்சம் ரூபாயை தர வேண்டும். இல்லையென்றால் இருவரும் சேர்ந்து வாழ்ந்தபோது எடுத்த ஆபாச வீடியோஸ், புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இதையடுத்து, விக்ரம் தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்வதாக கவிதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் கமிஷனரின் உத்தரவின்பேரில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விக்ரமிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரைக் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “கைதுசெய்யப்பட்ட விக்ரம், மருந்து கம்பெனி ஒன்றை நடத்தி வருவதாக கவிதாவிடம் கூறியிருக்கிறார். பின்னர் காதலர் தினத்தன்று கவிதாவிடம் காதலை விக்ரம் கூறியிருக்கிறார். அதை கவிதா ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகு கவிதா விக்ரமின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் வெளியூருக்குச் சென்றுள்ளனர். கவிதா, எம்.ஏ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவரின் முதல் திருமணம் விவாகரத்தாகிவிட்டதால் விக்ரமை இரண்டாவதாக திருமணம் செய்ய கவிதா குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.

கைது

இந்தச் சூழலில் விக்ரமின் பாலியல் டார்ச்சரால் கவிதா மனதளவில் பாதிக்கப்பட்டார். மேலும் கவிதாவுக்கு ஏற்கெனவே திருமணமான தகவல் தெரிந்ததும் விக்ரமின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விக்ரமிடம் விசாரித்தபோது அவர், இணையதளத்தில் ஆபாச கதைகளை தொடராக எழுதி வந்த தகவல் தெரியவந்தது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்திவருகிறோம். கவிதாவைப் பிரிந்த விக்ரம், இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில் அவரைக் கைதுசெய்துவிட்டோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.