புதுடெல்லி: ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.அவரது பயணத்தின் 2ம் நாளான நேற்று காலை ஜகந்நாதபுரம் பகுதியில், தூய்மை இந்தியா இயக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர், வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.மேலும், காக்கிநாடா ஸ்மார்ட் சிட்டி கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று, ஸ்மார்ட் சிட்டி (பொலிவுறு நகரம்) திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பெண்களுக்கான பிங்க் கழிவறைகள் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்குள்ள ஆயுஷ்மான் பாரத் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று நோயாளிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, சாமல்கோட் பகுதியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில், காக்கிநாடா நாடாளுமன்ற உறுப்பினர் வங்கா கீதா, மாவட்ட ஆட்சியர் கீர்த்திகா சுக்லா, சட்டமன்ற உறுப்பினர் துவாரம்குடி சந்திரசேகர் ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.