உத்திரப்பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் எனக்கூறி அவர்களின் வீடுகளை இடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை

புதுடெல்லி:உத்தரபிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் அல்லது கலவரத்தை தூண்டுபவர்கள் என யார் மீது சந்தேகம் வந்தாலும் அவர்களது வீடுகளை புல்டோசரால் தரை மட்டமாக்குவதே புதிய வழிமுறையாக அம்மாநில அரசு செய்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், வீடுகளை புல்டோசரால் இடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் போபண்ணா, விக்ரம்நாத் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சியூசிங், ‘சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை சந்தேகத்தின் அடிப்படையில் புல்டோசரால் இடிக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். இந்தியா மாதிரியான குடியரசு நாட்டில், இதுபோன்ற அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பான சம்பவங்களை ஏற்று கொள்ள முடியாது’ என்றார். உ.பி. மாநில அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா, ‘விதிமுறைகளை பின்பற்றிதான் கட்டுமானங்கள் இடிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட யாரும் நீதிமன்றத்தை நாடாதபோது, இஸ்லாமிய ஜமாத்தை சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் எந்த முகாந்திரமும் இல்லை’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அமர்வு, வீடுகள் இடிக்கப்பட்டால், அவர்களால் உடனடியாக வீடுகளை கட்ட முடியாது. பொருளாதார இழப்பீட்டை அடிப்படையாக கொண்டு நீதிமன்றத்துக்கும் உடனடியாக அவர்களால் வர முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் புல்டோசரால் வீடுகள் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க கோரிய மனு மீது 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர். மேலும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது உரிய சட்ட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்’ எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு 3 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.