ஒற்றைத் தலைமை வேண்டாம்; ஜெயக்குமார் மீது நடவடிக்கை தேவை: ஓ.பி.எஸ் வீட்டில் கோவை செல்வராஜ் பேட்டி

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒற்றைத் தலைமை என்ற வார்த்தைக்கே இடமில்லை என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ஒற்றைத் தலைமை குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கட்சியில் நடவடிக்கை தேவை என்று வலியுறுத்திள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எழுந்த அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை… அது காலத்தின் கட்டாயம், ஒற்றைத் தலைமை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜெயக்குமார் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்ததாகக் கூறியதையடுத்து, அதிமுகவில் ஒரு பெரும் புயலே வீசத் தொடங்கியுள்ளது. அதிமுகவில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தேனி, ராமநாதபுரம் என பல்வேறு இடங்களில் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். எடப்பாடி ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாக கட்சியில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை சென்னையில் உள்ள ஓ.பி.எஸ் வீட்டின் முன்பு அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.

இதையடுத்து, ஓ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்து ட்வீட் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜெயக்குமாரின் கருத்து கட்சியின் கருத்து அல்ல… அவர் கூட்டத்தில் நடந்ததை பற்றி ஊடகங்களிடம் பேசியதே தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சீராக செயல்பட்டு வருகிறது. கட்சியை அழிக்க யார் நினைத்தாலும் ஓ.பி.எஸ் விடமாட்டார்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.