சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர். ஷாவுக்கு மாரடைப்பு

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருப்பவர் எம்.ஆர். ஷா (வயது 64). இமாசல பிரதேசத்தில் தங்கியிருந்த அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி நீதிபதி எம்.ஆர். ஷாவின் தனி செயலாளர் கூறும்போது, இமாசல பிரதேசத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

அவருக்கு லேசான அறிகுறியே தென்பட்டது. அதனால் பயப்பட தேவையில்லை. தற்போது, அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. அவர் நன்றாகவே உணர்கிறார். அவரை டெல்லிக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.

இதன்படி அவர் டெல்லிக்கு விமானத்தின் வழியே கொண்டு செல்லப்படுகிறார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியாவும் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். அவர் விரைவாக குணமடைந்து திரும்ப வேண்டும் என அதில் வேண்டி கொண்டுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்ற சேருவதற்கு முன்பு பாட்னா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியில் இருந்தவர் ஷா. அடுத்த ஆண்டு மே 15ந்தேதி அவர் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.