தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ரோஸி பாட்டி.. கேட்பாரின்றி சடலமாக கிடந்தார்..!

இறந்த பின்னர் தன்னை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் , ஒருவாரமாக வீட்டில் கேட்பாரற்ற சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியை சேர்ந்த 66 வயது ஆதரவற்ற மூதாட்டி ரோஸி..!

இந்த மூதாட்டிக்கு உறவினர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

ஆரம்பத்தில் வீட்டு வேலைகள் செய்து வந்த இவர் பின்னாட்களில் ஊராட்சி சார்பில் வழங்கக்கூடிய 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்று ஒரு நாள் கூட விடுமுறை போடாமல் வேலை செய்து வந்துள்ளார்.

இதனை பாராட்டி ஊராட்சி மன்ற தலைவர் இரண்டு முறை கவுரவித்து உள்ளார்.

அப்படி வேலைக்கு செல்லும் இடங்களில் உடன் பணி புரிபவர்கள் நீ இறந்தால் உன்னை அடக்கம் செய்ய யார் இருக்கிறார்கள் என கேட்டு கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட ரோஸி தான் இறந்தால் தன்னை அடக்கம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தான் வேலை செய்து சம்பாதித்து வைத்திருந்த ஐம்பதாயிரம் ருபாய் பணத்தில் தனக்கென்று ஒரு அழகான கல்லறையை கட்டி வைத்திருந்தார்.

அந்த கல்லறையின் பின்புறத்தில் ஒரு வாயில் வைத்து அதன் வழியாக உடலை உள்ளே தள்ளி அடக்கம் செய்யும் விதத்தில் அந்த கல்லறை வடிவமைக்கப் பட்டிருந்தது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ரோஸி பாட்டி கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

கவனிக்க யாரும் இல்லாத நிலையில் வீட்டிலேயே உயிரிழந்து கிடந்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு வாரமாக வீட்டின் வெளியே ரோஸியை காணமல் சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

அப்போது அவர் உடல் அழுகிய நிலையில் கேட்பாரற்று கிடந்துள்ளது.இதனை தொடர்ந்து அவர் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடம் வந்த போலீசார் றோசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரோஸி பாட்டியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவர் கட்டி வைத்திருக்கும் கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கேலி கிண்டல்களால் மனம் நொந்து உயிரோடு இருக்கும் போதே தனக்கு கல்லறை கட்டி காத்திருந்த மூதாட்டி கேட்பாரின்றி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.