தேவை ஒற்றை தலைமை.. அதிமுகவில் வலுக்கும் கோரிக்கை..!

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவையில்லை இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக எழுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களை போலவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை மூத்த நிர்வாகிகள் மனோஜ் பாண்டியன், அலெக்சாண்டர் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சென்னையில் இருந்து இன்று சேலம் சென்றடைந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள் ஆதரவு கோஷங்களை எழுப்பினார்கள்.

மாலையில் எடப்பாடி பழனிச்சாமியை மூத்த நிர்வாகிகள் தம்பித்துரை, கே பி முனுசாமி உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

இதனிடையே சென்னையில் அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற தீர்மானக் குழு கூட்டத்தில் இருந்து ஜெயக்குமார் மற்றும் சி வி சண்முகம் ஆகியோர் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயக்குமாரின் காரை முற்றுகையிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினார்கள். ஆனால், மர்ம நபர்கள் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், உரிய பாதுகாப்பு கோரியும் அதிமுக நிர்வாகி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஜெயக்குமாரும், சி வி சண்முகமும் வெளியேறி சிறிது நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். தீர்மான குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். ஒற்றை தலைமை தீர்மானத்தை தவிர ஏனைய தீர்மானங்கள் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மூத்த நிர்வாகி பொன்னையன், திட்டமிட்டபடி23 ஆம் தேதி பொதுக்குழு நடைப்பெறும் என்றும் நகமும்,சதையும் போல் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்

இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவையில்லை இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.