ராகுல் காந்தி நாளையும் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை அதிரடி!

அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சோனியாகாந்தி, ராகுல் காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். அதன்படி, சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சோனியாகாந்தி கடந்த 8ஆம் தேதியும், ராகுல் காந்தி கடந்த 2ஆம் தேதியும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், வெளிநாட்டில் இருந்ததால் ராகுல் காந்தி வேறு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதேபோல், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சோனியாவும் வேறு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி, ராகுல் காந்தி கடந்த 13ஆம் தேதியும், சோனியா காந்தி 23ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத்துறை புதிய தேதியை ஒதுக்கியது. இதையடுத்து, ராகுல் காந்தி கடந்த 13ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரனார். அவரிடம் அன்றைய தினம் மட்டும் சுமார் 9 மணி நேரம் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் அந்தஸ்திலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று முன் தினம், நேற்று என அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து ஆஜராகி வருகிறார். இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில்
காங்கிரஸ்
எம்.பி., ராகுல் காந்தி நாளையும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் பாஜக அரசு மத்திய அமைப்புகளை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியினர், நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். அவர்களிடம் டெல்லி காவல்துறை அத்துமீறி நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.