ராணுவ வாகனம் ஓட்டி, வீரர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

ஜம்மு,

நாட்டின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ராணுவ வீரர்களின் முகாம்களுக்கு சென்று அவர்களுடன் உரையாடுவார். நாளை நடைபெற உள்ள மகாராஜா குலாப் சிங்கின் 200வது ஆண்டு முடிசூட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

இதற்காக காஷ்மீர் சென்ற அவர் பாராமுல்லா பகுதியில் உள்ள வீரர்களுக்கான நினைவகத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படமும் எடுத்து கொண்டார்.

அதன்பின், பராகானா பகுதிக்கு செல்வதற்காக பாராமுல்லா நகரில் மலை பிரதேசம் உள்ளிட்ட அனைத்து நிலையிலான தரை பகுதிகளிலும் பயணிக்கும் திறன் கொண்ட ராணுவ வாகனம் ஒன்றை அவரே ஓட்டி சென்றார்.

கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு எதிரான போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, ராஜ்நாத் சிங் அவர்களுக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் இன்று மதிய உணவு சாப்பிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.