வீடு வீடாக சோப்பு விற்கிறார் : நடிகை ஐஸ்வர்யாவின் இன்றைய நிலை

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தில் அறிமுகமாகி மில் தொழிலாளி, தையல்காரன், மரிக்கொழுந்து, ராசுக்குட்டி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோயின் வாய்ப்பு இல்லாவிட்டாலும் குணசித்ர, வில்லி வேடங்களில் நடித்துள்ளார். தற்போது யானை படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் தற்போது பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும், வீடு வீடாக சென்று சோப்பு விற்று வருவதாகவும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் இப்போது வேலை இல்லாமல் தவித்து வருகிறேன், வருமானம் இன்றி இருக்கிறேன், இந்த நிலை மாற வேண்டுமென்றால் எனக்கு வேலை வேண்டும். வேலையும் இல்லாததால் வீடு வீடாக சென்று சோப்பு விற்றுக் கொண்டிருக்கிறேன். நல்ல சம்பளம் கிடைத்தால் கழிவறை சுத்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன். அதேசமயம் இப்போது நான் பார்க்க வேலை மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் இப்போது எனக்கு கடன் இல்லை, வேறு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வேலை மட்டுமே இல்லை. நான் இப்போது செய்கிற வேலையை எண்ணி நான் வருத்தப்படவில்லை, பெருமைப்படுகிறேன்.

நான் நான்கு பூனைகளுடன் தனியாகத்தான் வாழ்கிறேன். யோகா பயிற்சியின் மூலம் ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன், ஆனால் இப்போது பொருளாதாரத்தில் மாற்றம் இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் எனக்கு ஒரு மெகா சீரியல் வேண்டும், நான் பிழைத்தது சீரியலை வைத்துத் தான், சினிமாவால் இல்லை. எனக்கு சினிமா சோறு போடவில்லை, டிவி தான் சோறு போட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.