'கமல் உங்களுக்கு என்னப் பரிசு கொடுத்தார்?' – தனது ஸ்டைலில் பதிலளித்த விஜய் சேதுபதி!

‘விக்ரம்’ படத்தில் சந்தானமாக நடித்து மிரட்டிய தங்களுக்கு, நடிகர் கமல்ஹாசன் என்னப் பரிசு கொடுத்தார் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு விஜய் சேதுபதி தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படம், 13 நாட்களிலேயே 340 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. தற்போதும் திரையரங்குகளில் ‘விக்ரம்’ படத்திற்கு வரவேற்பு இருந்து வரும் நிலையில், வரும் நாட்களில் வசூலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில், 3 மனைவிகள், பெரிய கூட்டுக் குடும்பம், போதைப் பொருள் கடத்தல் என ‘விக்ரம்’ படத்தில் சந்தானமாக மிரட்டிய நடிகர் விஜய் சேதுபதியிடம் கமல்ஹாசன் தங்களுக்கு என்னப் பரிசு கொடுத்தார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பதிலளித்து பேசிய அவர், ‘கமல் சாரோட நடிக்கிற வாய்ப்ப கொடுத்தார். அதுவே பெரும் பாக்கியம். அது எவ்வளவு பெரிய விஷயம். வாழ்நாளில் நான் கற்பனை பண்ணிக்கூட பார்த்ததில்லை. நடிகராவேன் என்று கூட கற்பனை பண்ணி பார்த்ததில்லை. ஒருமுறை கூட யோசிக்கவில்லை. அனுபவம் போடுற திட்டம் ரொம்ப சின்னது. கலை பல கோடி வருஷமா இருக்கு. அதுபோடுற திட்டம் தான் பெரிசு. அதனால் அதுகிட்ட சரண் அடைவதுதான் நல்லது ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

image

முன்னதாக தான் நடித்தப் படங்களிலேயே அதிக வசூல் மற்றும் வரவேற்பைப் பெற்ற படம் என்பதால் மகிழ்ச்சியடைந்த கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-க்கு ஆடம்பர கார் ஒன்றையும், உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு இருசக்கர வாகனங்களையும், சிறப்புத் தோற்றத்தில் வந்து மிரட்டிய சூர்யாவுக்கு தனது ஆடம்பர ரோலக்ஸ் வாட்ச்சையும் பரிசளித்தார். இது மிகப் பெரிய வைரலான நிலையில், மீம் கிரியேட்டர்கள் ஃபஹத் பாசிலுக்கு பரிசாக காயத்ரியின் தலையை கமல்ஹாசன் கொடுப்பதாக உருவாக்கினர். இதனை காயத்ரியும் தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அனிருத்திடம், கமல்ஹாசன் தங்களுக்கு என்ன பரிசுக் கொடுத்தார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘விக்ரம்’ படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.