‘அக்னி பாதை’க்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் – சோனியா காந்தி

புதுடெல்லி: “அக்னி பாதை திட்டத்தை எதிர்த்தும் போராடும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்” என்று மருத்துவமனையில் இருந்தபடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது அறிக்கை ஒன்றை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘அக்னி பாதை’யை திக்குத் தெரியாத திட்டம் என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக போராடி வரும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்று தெரிவித்துள்ள அவர், “மத்தியில் ஆளும் பாஜக அரசு, இளைஞர்களின் குரலைப் புறக்கணிக்கிறது. தங்கள் கோரிக்கைகளுக்காக போராடும் இளைஞர்கள் அமைதியான, வன்முறையற்ற வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் ‘அக்னி பாதை’ திட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 13-ம் தேதி அறிமுகம் செய்தார்.

இந்தத் திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பிஹாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிஹார், உ.பி., ஹரியாணா என வட மாநிலங்களில் ஆரம்பித்த போராட்டம் நேற்று தெலங்கானாவுக்கும் பரவியது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீவைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பிஹார் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 12 ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன. போராட்டம் நாடு முழுவதும் சுமார் 300 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அக்னி பாதை திட்டத்தின் தேர்வாகி 4 ஆண்டுகள் அக்னி வீரர்களாக பணியாற்றிவிட்டு ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களுக்கு சிஏபிஎஃப் எனப்படும் மத்திய ஆயுதப் படை, மற்றும் அசாம் ரைஃபில்ஸில் படைப்பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், தொடர்ந்து இத்திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பாதுகாப்புப் படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். 8 மாநிலங்களில் அக்னி பாதை எதிர்ப்புப் போராட்டம் வலுத்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.