ஒற்றைத் தலைமை விவகாரம்: பிரிந்து கிடக்கும் அதிமுக – சமாதான முயற்சியில் இறங்கிய நிர்வாகிகள்!

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்படி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் கடந்த ஆண்டு டிச.,7-ம் தேதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஒற்றை வாக்கு அடிப்படையில், பன்னீர், பழனிசாமி தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து, அமைப்பு ரீதியான 75 மாவட்டங்களுக்கான செயலாளர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கீழ்மட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்

இதனை பொதுக்குழுவில் சமர்ப்பித்து, ஓப்புதல் பெறுவதற்கான கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க ஜூன் 14-ம் தேதி நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்தான், ஒற்றைத் தலைமை விவாதம் வெடித்து விவகாரமானது.

கூட்டத்தின் தொடக்கத்தில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்கள், அடையாள அட்டையுடன் வருபவர்களை மட்டுமே பொதுக்குழுவில் அனுமதிப்பது, மாவட்டம்தோறும் தி.மு.க-வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடியும் தறுவாயில்தான், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி எழுந்து ‘ஒற்றைத் தலைமை’ விவகாரம் குறித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம், பரஞ்சோதி, பி.குமார், குமரகுரு என 30-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ‘ஒற்றைத் தலைமை’ குறித்துப் பேசியதால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமே போர்க்களமானது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

மா.செ-க்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் பேசப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதால், தமிழ்நாடு முழுவதும் இந்த விவகாரம் பேசுபொருளானது. மேலும், கட்சியினருக்குள் இருந்த நீண்டகால மௌனமும் கலைந்தது. இந்நிலையில், தன் ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் தனது இல்லத்திலும், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்திலும் ஆலோசனை நடத்தியதால், ஒற்றைத் தலைமை விவகாரம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, 16-ம் தேதி மாலை பகிரங்க பேட்டிக் கொடுத்த பன்னீர், “ஒற்றைத் தலைமை என்பது அம்மாவுக்குச் செய்யும் துரோகம். அவர் மட்டுமே அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச்செயலாளர். தேவையற்ற இப்படியான விவாதங்களால் தொண்டர்களைச் சஞ்சலப்படுத்தக் கூடாது. இந்தப் பிரச்னையைக் கிளப்பியவர்களைக் கண்டிக்க வேண்டும். அ.தி.மு.க-விலிருந்து என்னை ஒருபோதும் ஓரங்கட்ட முடியாது. 14 பேர் கொண்ட உயர்மட்ட ஆலோசனைக்குழு அமைத்து, இந்தப் பிரச்னைகள் தொடர்பாக விவாதித்து, முடிவெடுக்கப்பட்டால் அதற்கு நான் கட்டுப்படுவேன்” என்றார்.

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

மேலும், கட்சியில் நான் தொடர்ந்து ஓரம்கட்டப்பட்டேன் என்று பகிரங்கமாகச் சொன்னார் பன்னீர். இதற்கிடையே, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை தொடர்பாக போஸ்டர் யுத்தத்தைத் தொடங்கிவிட்டனர். ஆனால், எப்போதும் தடாலடி அரசியல் செய்யும் பழனிசாமி, இது குறித்து இன்னும் பேசவேயில்லை. விவகாரம் பெரிதானதால், இரு தரப்பையும் சமாதானப்படுத்த மூத்த நிர்வாகிகள் சிலர் இறங்கியுள்ளனர். ஆனால், ஒற்றைத் தலைமை இப்போது இல்லை என்றால், வேறு எப்போதுமில்லை என்று ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள் இறங்கிவிட்டனர். ஆனால், மொத்தமுள்ள 75 மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலோனர் இ.பி.எஸ் பக்கமே இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும், கொங்கு மண்டல மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானோரும் இ.பி.எஸ் பக்கம் இருக்கிறார்கள்.

அதேபோல, தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் வேளச்சேரி அசோக், நத்தம் விசுவநாதன், ஜே.சி.டி.பிரபாகரன், தச்சை கணேசராஜா, மனோஜ் பாண்டியன், ஆர்.தர்மர் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகள் ஓ.பி.எஸ் பக்கம் நிற்கிறார்கள்.

இது தொடர்பாக சமாதான முயற்சி மேற்கொள்ளும் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

“அம்மாவால் அடையாளம் காணப்பட்டு 2 முறை சி.எம் ஆகிவிட்டார் பன்னீர். பன்னீர்செல்வம் போன்ற ஒரு தொண்டனை நான் அடைந்திருப்பது நான் செய்த பாக்கியம் என்று அம்மாவே கூறியிருக்கிறார். எனவே, அவர்தான் ஒற்றை தலைமைக்குச் சரியானவர் என்கிறார்கள் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். ஆனால், தி.மு.க ஒருபக்கம், சசிகலா, தினகரன் ஒருபக்கம் என மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், கட்சியையும், ஆட்சியையும் பழனிசாமி திறம்படச் சமாளித்தார். எனவே, இ.பி.எஸ்-தான் ஒற்றைத் தலைமைக்குப் பொருத்தமானவர் என்று அவர் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

ஜெயலலிதா-வை வணங்கும் ஓ.பன்னீர்செல்வம்

ஆனால், ஒற்றைத் தலைமை விவகாரம் தற்போது வேண்டாம் என்றுதான் ஓ.பி.எஸ் கூறுகிறார். பழனிசாமி இதுவரை இந்த விவகாரம் குறித்து மௌமாகவே இருக்கிறார். இருந்தபோதிலும், 70 சதவிகிதத்துக்கும் மேலான நிர்வாகிகள் பழனிசாமி பக்கம்தான் இருக்கிறார்கள். இது ஓ.பி.எஸ்-ஸுக்கு தெரியும். ஒற்றைத் தலைமை விவகாரத்தை எடுத்தோம்… கவிழ்த்தோம் என்று செய்துவிட முடியாது. இதனைத் தான் ஓ.பி.எஸ்-ஸும் சொல்கிறார். யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது. எனவே, தற்போது ஒற்றைத் தலைமை விவகாரத்தைத் தள்ளிவைத்து, பொதுக்குழுவைச் சுமுகமாக நடத்த முயற்சி செய்கிறோம். இதற்காக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை வைத்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ்-ஸை சந்தித்து வருகிறோம். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.