சொட்டு சொட்டாக வரும் விந்து திரவம்; தீர்வு என்ன? I காமத்துக்கு மரியாதை S2 E25

குழந்தையில்லா தம்பதியர் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகளில் மிக முக்கியமானது விந்து பரிசோதனை. ஆய்வகத்தில் பரிசோதனைக்காக விந்தணுக்களைச் சேகரிக்கையில், தனக்கு ஏற்பட்ட குறைபாட்டை வாசகர் ஒருவர் நம்முடைய [email protected] மெயிலில் பகிர்ந்திருந்தார்.

`விந்து பரிசோதனை செய்யும்போதெல்லாம் எனக்கு ஒன்றிரண்டு சொட்டுகள் மட்டுமே வருகின்றன. குழந்தைப்பேற்றுக்கு அது போதுமான அளவு இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். என் பிரச்னைக்குத் தீர்வு இருக்கிறதா?’ – இதுதான் அந்த வாசகரின் கேள்வி. பதிலளிக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

காமத்துக்கு மரியாதை

“முதலில் அது விந்து திரவம்தானா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், விந்து வெளியேறும்போது உச்சக்கட்ட உணர்வு ஏற்படும். இதற்காகத்தான் ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள். ஆணுறுப்பு தூண்டப்பட்டவுடன் விந்து வெளிவரும். 0.8 செகண்டில் மறுமுறை வரும். சில நொடிகள் கழித்து மறுபடியும்… இப்படி 6 அல்லது 8 முறை விந்து வெளிவரும். மோட்டார் பம்ப் போல தொடர்ந்து வராது. விட்டு விட்டுத்தான் வரும்.

வலிந்து ஆணுறுப்பைத் தூண்டும்போது, உறுப்பின் பக்கத்தில் இருக்கிற மற்ற சுரப்பிகளில் இருந்து ஒன்றிரண்டு சொட்டுகள் வந்துவிடலாம், அது விந்து அல்ல. அதனால், அந்த வாசகருக்கு வந்தது விந்துவா அல்லது மற்ற சுரப்பிகளின் சுரப்பா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

வருவது விந்து திரவம்தான். ஆனால், குறைவாக வருகிறது என்றால், விந்து எடுத்தவுடன், தனியாக ஒரு வெள்ளை பாத்திரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும். அதில் விந்து திரவம் பாலாடைபோல சேர்ந்து வரலாம். இப்படி வந்தால், விந்துவானது சிறுநீர்ப்பைக்குள் சென்று விழுந்துவிட்டது என்று அர்த்தம். இதன் காரணமாகவும் சில சொட்டுகள் மட்டுமே விந்தணுக்கள் வரும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, சில மருந்துகள் சாப்பிடுபவர் களுக்கு, புராஸ்ட்டேட் சுரப்பியில் அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு இப்படி நிகழும்.

பாலியல் மருத்துவ நிபுணர் காமராஜ்

மேலே சொன்னவைபோல எந்த பிரச்னைகளும் இல்லை. ஆனால், ஒன்றிரண்டு சொட்டுகள் மட்டுமே வருகின்றன என்றால், அதற்கென இருக்கிற சில மருந்துகளைச் சாப்பிட்டாலே தீர்வு கிடைத்துவிடும். தவிர, எலெக்ட்ரோ வைப்ரேஷன் மூலமும் விந்தைச் சேகரிக்கலாம். இவற்றினாலும் பலன் கிடைக்கவில்லையென்றால், எலெக்ட்ரோ எஜாகுலேஷன் முறையை முயற்சி செய்யலாம்.

உலகத்தில் இருக்கிற அரிதான விலங்குகளைக் காப்பாற்றுவதற்காக எலெக்ட்ரோ எஜாகுலேஷன் முறையில் ஆண் விலங்குகளின் விந்தணுக்களைச் சேகரித்து பெண் விலங்குகளைக் கருவுற வைப்பார்கள். இந்த முறையை மனிதர்களுக்கும் பயன்படுத்தலாம். பக்கவாதம் பாதித்தவர்கள், மூளைச்சாவு அடைந்தவர்கள், சுயநினைவு இழந்தவர்கள், விபத்து காரணமாகத் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதவர்கள் ஆகியோரிடம் இருந்து மனைவியின் விருப்பத்தின் பேரில், இந்த முறையில் விந்தணுக்களை எடுக்கலாம். பக்கவிளைவுகள் இல்லாத வழிமுறை இது.

இவை எல்லாவற்றையும்விட, உங்களுக்கு செக்ஸில் ஆர்வம் வரும்போது விந்தணுக்கள் வெளிவருவது வேறு, ஓர் ஆய்வகத்தில் பரிசோதனைக்காக விந்தணுக்களை எடுப்பது என்பது வேறு. வெளியிடங்களில் செய்யும்போது மன அழுத்தம், பதற்றம் காரணமாக விரைப்பு வராமல் போகலாம்; விந்து வராமல் போகலாம். அதனால், வீட்டில் சேகரித்துக் கொண்டுபோய் பரிசோதனைக் கூடத்தில் கொடுக்கலாம். எந்த கன்டெய்னரில் சேகரிக்க வேண்டுமென்பதை பரிசோதனைக்கூடத்தில் கேட்டு அதன்படி செய்வது முக்கியம்.

சில வெளிநாடுகளில் சுய இன்பம் செய்வதற்கான அறைகள் (Masterbatorium) இருக்கும். அந்த அறைகளில் செக்ஸ் வீடியோக்கள் இருக்கும். அங்கே ரிலாக்ஸாக விந்தணுக்களைச் சேகரித்து பரிசோதனைக்குக் கொடுக்கலாம். இந்தியாவில் ஒருவர் டாய்லெட்டுக்குள் சென்று விந்து சேகரித்துக் கொண்டிருக்கும்போதே இன்னொருவர் வந்து கதவைத் தட்டுவார்.

காமத்துக்கு மரியாதை

செக்ஸ் ஆர்வமில்லாமல் இருக்கும்போதும்… மனைவி செயற்கை கருவுறுதலுக்குக் காத்துக்கொண்டிருக்க, கணவர் உடனடியாக விந்து எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போதும், விந்து வெளிவராது. பதற்றத்தில் சிறுநீரைச் சேகரித்துக் கொண்டு வருகிற ஆண்கள்கூட இருக்கிறார்கள். உங்களுடைய பிரச்னைக்கு காரணத்தைத் தெரிந்துகொண்டு சிகிச்சை செய்தால், சீக்கிரம் சரி செய்துவிடலாம்” என்கிறார் டாக்டர் காமராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.