திருமண வரவேற்பில் தகராறு; இருவர் காயம்| Dinamalar

இந்திய நிகழ்வுகள்

பயங்கரவாதிகள் வெறிச்செயல்: போலீஸ்காரர் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்-ஜம்மு – காஷ்மீரில் போலீஸ்காரர் ஒருவரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

வழக்கு பதிவு
ஜம்மு – காஷ்மீரில், பாம்போர் நகர் அருகே சம்பூரா கிராமத்தைச் சேர்ந்தவர் பரூக் அகமது மிர். போலீஸ் எஸ்.ஐ.,யாக உள்ள பரூக் அகமது மிர் உடல், அவர் வீட்டிற்கு பின்புறமுள்ள நெல் வயலில் கிடந்தது. இது குறித்த தகவல் அறிந்து போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பரூக் அகமது மிர், நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றார். அப்போது பயங்கரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாளிகளை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

சந்தேகம்
இதற்கிடையே, காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது; அது, சக்தி வாய்ந்த வெடிகுண்டாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர்.

தமிழக நிகழ்வுகள்

சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

திண்டிவனம்,-திண்டிவனத்தில் சிறுமியை திருமணம் செய்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், ஊரல் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரல், 6ம் தேதி பட்டணம் கிராமத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடந்துள்ளது.இதுகுறித்து, நேற்று முன்தினம் 1098 எண் மூலம் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாளுக்கு தகவல் கிடைத்தது.புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார், நேற்று சிறுமியை திருமணம் செய்ததாக ஜானகிராமன் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மாணவி தற்கொலை

செஞ்சி,-விழுப்புரம் அருகே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசப் மகள் டெல்பினா, 17; அன்னியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் தனது தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.பெற்றோர் அவரை தேடி வந்த நிலையில், நேற்று காலை அன்னியூரில் உள்ள விவசாய கிணற்றின் கரை மீது டெல்பினாவின் செருப்பும், துப்பட்டாவும் இருந்தது தெரியவந்தது.சந்தேகமடைந்த விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியதில் டெல்பினா இறந்து கிடந்தது தெரியவந்தது.கஞ்சனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருமண வரவேற்பில் தகராறு; 2 பேர் காயம்: போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டி,-விக்கிரவாண்டியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி.மேலக்கொந்தையைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது, திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை, விக்கிரவாண்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.அப்போது, இசை நடன நிகழ்ச்சியில், பெண் வீட்டு தரப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் நடனமாடிக் கொண்டிருந்தார். அதை மாப்பிள்ளை வீட்டார் தட்டிக் கேட்டதால், இரு வீட்டாருக்குமிடையே மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இதில் ஆர்.சி., மேலக்கொந்தையைச் சேர்ந்த இளவரசன், 27; மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து தாக்கியதில் கப்பியாம்புலியூர் தினேஷ், 23; பிரதீஷ், 24; ஆகிய இருவரும் காயமடைந்தனர்.இது குறித்த புகாரின் பேரில் இளவரசன் உட்பட 2 பேர் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இரு வாலிபர்களை வாளால் வெட்டிய மூவர் கைது

ராமநாதபுரம்–ராமநாதபுரம் அருகே மதுக்கடையில் பாலமுரளி30, நாகேஸ்வரன் 32, ஆகியோரை பீர் பாட்டிலால் குத்தி வாளால் வெட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மகாத்மாகாந்தி நகர் ஏழாவது தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பாலமுரளி 30, அவரது நண்பர் கறிவேப்பிலைக்கார தெரு மதிவாணன் மகன் நாகேஸ்வரன் 32, இருவரும் மாடக்கொட்டான் பகுதி டாஸ்மாக் கடையில் மது அருந்தினர்.அப்போது அங்கு வந்த ராமநாதபுரம் கோகுல்நகர் ராமபாண்டியன் மகன் அரவிந்த் 29, சேதுபதிநகர் வடக்கு ரவிபாஸ்கரன் மகன் கிரி நிவாஸ் 27, மாடக்கொட்டான் பாக்கியம் மகன் கணேசன் 27, ஆகியோர் தீப்பெட்டி கேட்டு திட்டினர்.வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மூவரும் பாலமுரளியை மறைத்துவைத்திருந்த வாளால் வெட்டினர். பீர்பாட்டிலால் குத்தினர். தடுத்த நாகேஸ்வரனையும் தாக்கினர். இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கேணிக்கரை போலீசார் அரவிந்த், கிரிநிவாஸ், கணேசன் ஆகிய மூவரையும் ஆயுத பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மின்னல் தாக்கி ஒருவர் பலி ;இருவர் காயம்

பரமக்குடி–பரமக்குடி அருகே மேலப் பார்த்திபனுார் பெரிய கண்மாய் வயலில்மழை பெய்த போதுமின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்த ஒருவர் பலியானார்.பார்த்திபனூர் எச்.பரளை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணு, 39. இவருக்கு மனைவி மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி பலியானார்.பார்த்திபனூர் செல்வராஜ் மனைவி சகுந்தலா, 42, லட்சுமணன் மனைவி ஆறுமுகம், 40, இருவரும் காயமடைந்து பார்த்திபனூர் தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

குண்டர் சட்டத்தில் 11 பேர் சிறையில் அடைப்பு

சென்னை, தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 11 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், நன்னடத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஹரிஷ், 24, ஜானகிராமன், 24, நரேஷ்குமார், 23, ரமேஷ், 22, எண்ணுாரைச் சேர்ந்த கார்த்திக், 26, ஆகிய ஆறு பேரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். சைதாப்பேட்டையை சேர்ந்த சரவணன், 26, உள்ளிட்ட 11 பேர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, 11 பேரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இந்தாண்டில் இதுவரை, 163 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்ட பிராட்வேயைச் சேர்ந்த தமிழ்செல்வன், 26, அமைந்தகரையை சேர்ந்த ஆழாக்கு, 28, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 28, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.