பொது போக்குவரத்து முடங்கியதால் இலங்கையில் அரசு அலுவலகம் பள்ளிகள் 2 வாரம் மூட உத்தரவு

கொழும்பு: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து முடங்கியதால் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படு கிறது.

1948-ம் ஆண்டு விடுதலைக்கு பிறகு இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்க டாலர் கையிருப்பு குறைந்ததால் கடந்த ஆண்டு இறுதி முதல், உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பல மணி நேர மின்வெட்டு நிலவுகிறது.

இந்நிலையில் டாலர்கள் இல்லாமல் எரிபொருள் இறக்குமதி நின்று போனதால் பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்ய முடியாத சூழலில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர்கள் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க பொது நிர்வாக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

திங்கட்கிழமை பள்ளிகளை 2 வாரங்களுக்கு மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மின்சார வசதி கிடைத்தால் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தலாம் என கல்வித் துறை கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.