மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து: 3ஆம் கட்ட சோதனை நிறைவு!

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதற்கிடையே, தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பிபிவி154 எனும் பெயர் கொண்ட இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு அண்மையில் இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது. 18 வயது முதல் 60 வயதுள்ள பிரிவினருக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்ட கடந்த இரண்டு கட்ட சோதனைகளில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில், மூன்றாவது கட்டமாக மனிதர்களிடையேயான சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சோதனை முறையில் 900 பேருக்கு செலுத்தி பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவு பெற்றுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், “மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தின் 3ஆம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன, தரவு பகுப்பாய்வு நடந்து வருகிறது. அடுத்த மாதம், தரவை ஒழுங்குமுறை நிறுவனத்திடம் சமர்ப்பிப்போம். எல்லாம் சரியாக இருந்தால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.” என்றார்.

அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருத்துக்கு தேவையான ஆதரவை மத்திய உயிர் தொழில்நுட்பத்துறையும், அதனுடைய நிறுவனமான உயிர்தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.