22ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: சொப்னாவுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக்கடத்தல் விவகாரம் 2 வருடங்களுக்குப் பிறகு கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் சொப்னா சமீபத்தில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக ரகசிய வாக்குமூலம் அளித்தது தான் இதற்கு காரணமாகும். அதைத்தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி கடந்த பல நாட்களாக காங்கிரஸ், பாஜக, முஸ்லிம்லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்றும் திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. இந்த நிலையில் சொப்னா அளித்த ரகசிய வாக்குமூலம் தொடர்பாக அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத்துறை தீர்மானித்து உள்ளது. வரும் 22ம் தேதி கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. தங்கக்கடத்தல் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சுங்க இலாகாவிடமும் சொப்னா ரகசிய வாக்குமூலம் அளித்து இருந்தார். ஆனால் அதில் தான் கூறியவை தொடர்பாக சுங்க இலாகா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். இதற்கிடையே நீதிமன்றத்தில் சொப்னா அளித்த ரகசிய வாக்குமூலம் குறித்த விவரங்களை தங்களுக்கு வழங்க வேண்டுமென்று கூறி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத்துறை ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து சொப்னா அளித்த ரகசிய வாக்குமூல விவரங்கள் மத்திய அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டது. இதேபோல சுங்க இலாகாவிடம் அளித்த ரகசிய வாக்குமூல விவரங்களும் மத்திய அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளது. இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த பின்னர் சொப்னாவிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.