எத்தியோப்பியா: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் பலி

நைரோபி,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

குறிப்பாக அந்நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. ஒரொமியா மாகாணத்தை எத்தியோவில் இருந்து பிரிந்து தனிநாடாக அறிவிப்பதை இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்புகள் நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்புகள் அவ்வப்போது பொதுமக்கள், ராணுவம் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஒரொமியா மாகாணம் கிம்பி நகரில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த மக்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அம்ஹரா என்ற இனக்குழுவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.