கோவை: காவல் நிலையத்திலிருந்து இளைஞர் தப்பியோட்டம் – பிடிக்க முயன்றபோது காவலருக்கு காயம்

கோவை: கோவையில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே தப்பியோடிய இளைஞரை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவரை பிடிக்க முயன்ற போது காவலருக்கு காயம் ஏற்பட்டது.

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவா(22). இவர், சில தினங்களுக்கு முன்னர், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஜீவா தனது சகோதரருடன் சேர்ந்து சுரேஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த சுரேஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின்பேரில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஜீவா ஆர்.எஸ்.புரத்தில் ஒரு இடத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இன்று (ஜூன் 20-ம் தேதி) ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஜீவாவை பிடித்து, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது திடீரென்று ஜீவா, காவல் நிலையத்திலிருந்து வெளியே தப்பி ஓடினார்.

இதைப் பார்த்த காவலர் அராபத் அலி அவரை துரத்திச்சென்றார். அப்போது ஜீவா அங்கிருந்த மாநகராட்சிப் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பிச் செல்ல முயன்றார். அந்த சுற்றுச்சுவரில் கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டு இருந்ததால், அது குத்தியதில் ஜீவாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதுபோன்று அவரை துரத்திச் சென்ற காவலர் அராபத் அலிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர், அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜீவாவை பிடித்தார். தொடர்ந்து 2 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இதைத்தொடர்ந்து ஜீவாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.