அக்னிபத் திட்டம்: மத்திய அரசு கேவியட் மனு!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், இந்தத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என டெல்லி வழக்கறிஞர் ஒருவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் கருத்தை கேட்காமல் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என மத்திய அரசு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.