உலகின் மிக உயரமான படேல் சிலைக்கு அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு: நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

குஜராத்: குஜராத்தில் ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) எனக் கூறப்படும் வல்லபாய் படேல் சிலைக்கு அருகே 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத்தின் நர்மதா மாவட்டத்தின் கெவாடியா கிராமத்தில் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை உலகிலேயே உயரமான சிலையாக கருதப்படுகிறது. இதை ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) என்று அழைப்பார்கள். இந்தச் சிலைக்கு அருகே நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் வீரியம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையம் கெவாடியா கிராமத்திற்கு தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் இருந்ததாக காந்திநகரை தளமாகக் கொண்ட நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் (ISR) தெரிவித்துள்ளது.திங்கட்கிழமை இரவு சரியாக 10.07 மணியளவில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அதன் மையப்பகுதி தெற்கு குஜராத்தில் உள்ள கெவாடியாவின் தென்கிழக்கே (ESE) 12 கிமீ தொலைவில் உள்ளது. இது 12.7 கிமீ ஆழத்தில் பதிவானது’ என்று நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சூறாவளிகளை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ஒற்றுமை சிலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று நினைவுச்சின்னத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ராகுல் படேல் தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.