கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2,426 கன அடி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் இன்று (21ம் தேதி) 2426 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களுரூ பகுதிகளில் பெய்த கனமழையாலும், தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 40.51 அடியாக உள்ளதால், வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று(21ம் தேதி) 2299 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 50.80 அடிக்கு தண்ணீர் உள்ளதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணையின் பாதுகாப்பினை கருதி விநாடிக்கு 2426 கனஅடி தண்ணீர், பிரதான மதகு வழியாகவும், 3 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரில் தரைப்பாலம் மூழ்கி செல்வதால், அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணையில் தரைப்பாலத்தை மூழ்கி தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அணைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.