President election: பாஜக தரப்பு வேட்பாளர் இவர்தான்!

நாட்டின் 14 ஆவது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜுலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது. இதனையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. சரத் பவார், பரூக் அப்துல்லா, கோபால கிருஷ்ண காந்தி உள்ளிட்டோரின் பெயர்கள் பரீசிலிக்கப்பட்டன. இவர்கள் யாரும் வேட்பாளராக போட்டியிட ஒப்புகொள்ளாததால், பொது வேட்பாளரை அறிவிப்பதில் சில வாரங்களாக இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த சின்ஹா நிறுத்தப்படுவதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு தேதிய அரசியலில் எகிறியது. இதற்கு விடையாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் யார் என்பதை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தற்போது அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரௌபதி மர்மு பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த நாட்டின் முதல் ஆளுநர் என்ற பெருமையை பெற்றுள்ள திரௌபதி மர்மு, குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்ப்ட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.