சீனாவில் நாளை ‘பிரிக்ஸ்’ மாநாடு: பிரதமர் மோடி காணொலியில் பங்கேற்பு

புதுடெல்லி: சீன அதிபர் ஜின்பிங் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்தாண்டு சீனா தலைமையில் 14வது பிரிக்ஸ் மாநாடு நாளை (23ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதையடுத்து பிரதமர் மோடி நாளை பிரிக்ஸ் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்து கொள்கிறார். அவருடன் ரஷிய அதிபர் புதின், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோரும் பங்கேற்று உரையாற்றுகின்றனர். மாநாட்டையொட்டி இன்று நடக்கும் வர்த்தக கூட்டத்தில் பிரதமர் மோடியின் அறிக்கை வாசிக்கப்படும். நாளை மறுநாள் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக உறுப்பு நாடுகளின் உயர்மட்டக் கூட்டம் நடக்க உள்ளது. மேலும், பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், சுற்றுச்சூழல், அறிவியல்-தொழில்நுட்பம், புத்தாக்கம், வேளாண்மை, தொழிலகக் கல்வி-பயிற்சி உள்ளிட்டவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளது. கொரோனா தொற்று பரவலை எதிர்கொள்ளுதல், பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, சர்வதேச பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.