சோதனைகளை சாதனையாக்கிய குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு – முழு பின்னணி!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்மு யார், அவரது பின்னணி என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
1958-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைடாபோசி என்ற கிராமத்தில் பிறந்தவர் திரெளபதி முர்மு. இவர் ‘சந்தல்’ என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி கல்லூரியில் பட்டப்படிப்புகளை முடித்தார். இதையடுத்து, ஸ்ரீ அரவிந்தர் கல்வி மையத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றினார். அதன் பிறகு ஒடிசா நீர்ப்பாசனத் துறையில் இளநிலை உதவியாளராக (ஜூனியர் அசிஸ்டண்ட்) பணிபுரிந்தார். பிறகு அரசியலில் ஆர்வம் காரணமாக பாஜகவில் 1997-ம் ஆண்டு இணைந்தார். அதே ஆண்டில், ராய்ரங்பூரில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
image
பிஜு ஜனதா தளம் – பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்த 2002-ஆம் ஆண்டு ராய்ரங்க்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரெளபதி முர்மு, ஒடிசா அமைச்சரவையில் இரண்டு ஆண்டுகள் போக்குவரத்து துறை அமைச்சராகவும் அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் மீன்வளத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2007-ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதினையும் இவர் பெற்றார். அரசியலில் இத்தனை பதவிகளை வகித்து வந்த முர்மு, பாஜகவின் பழங்குடியின அமைப்பின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2015-ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக திரெளபதி நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில், இந்தியாவிலேயே முதன்முதலாக பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் ஆளுநர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். இதனிடையே, கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் போதே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயர் பட்டியலில் இவரது பெயரும் பரிசீலனையில் இருந்ததது. ஆனால், ராம்நாத் கோவிந்தின் பெயர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி இவரது பெயரை அறிவித்துள்ளது.
image
சோகத்தையும், சோதனைகளையும் கடந்து…
அரசியலில் அடுத்தடுத்து மிக முக்கிய இடங்களையும், பதவிகளையும் இவர் பெற்றிருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் பெரும் சோகங்களை திரெளபதி முர்மு கடந்து வந்துள்ளார். இவரது கணவர் சியாம் சரன் முர்மு விபத்தில் உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, அவரது இரண்டு மகன்களும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இது அவரது வாழ்வில் மீள முடியாத சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், தன்னம்பிக்கையை விடாமல் மக்களுக்காக பணியாற்றிய இவர், தற்போது குடியரசுத் தலைவர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார். அத்துடன், சுதந்திரத்துக்கு பிறகு பிறந்த ஒருவர் குடியரசுத் தலைவராவது இதுவே முதன்முறையாக இருக்கும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.