திருவாரூர்: தீக்குளித்த பெண் உயிரிழப்பு: வரதட்சணை கொடுமை என உறவினர்கள் போராட்டம்

வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண் உயிரிழந்துள்ளார். அவரது உடலை வாங்க மறுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி நீலாவதி நகரைச் சேர்ந்தவர்கள் சூரியா – காளியம்மாள் (25) தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காளியம்மாள் தீக்குளித்து தற்கொலை முயன்றுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
image
இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்றவந்த காளியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் வரதட்சணை கொடுமை செய்த அவருடைய மாமனார் ரவி மற்றும் அவருடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது மனைவிகளான சுமதி, லலிதா ஆகிய மூவரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கூத்தாநல்லூர் காவல்நிலைய காவலர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் ஆகியோர் நேரில் சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
image
இதையடுத்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் பிரேதத்தை எடுத்துச் சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.