மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி கலைகிறது? – செம கடுப்பில் முதல்வர் தாக்கரே!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சராக உள்ள சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார். இதைத் தொடர்ந்து, அசாம் மாநிலம் கவுகாத்தில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமை கொறடா பதவியில் இருந்து நீக்கி சிவசேனா உத்தரவிட்டது.

அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன், 5 சுயேட்சை எம்எல்ஏக்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

அமைச்சர் உட்பட 22 பேர், கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறும் பட்சத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை இழப்பதோடு மட்டுமல்லாமல், ஆட்சியை பறிகொடுப்பார். இந்த விவகாரம் மகாராஷ்டிர மாநில அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும், சிவசேனா கட்சி மூத்தத் தலைவருமான சஞ்சய் ராவத், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் தற்போதைய அரசியல் திருப்பங்கள், சட்டப்பேரவை கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்தி வருகின்றன” என குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனக்கு 46 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் நொடிக்கு நொடி அரசியல் அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.