ராகுலிடம் 50 மணி நேரம் விசாரணை முடிந்த நிலையில் சோனியா காந்தி நாளை ஆஜராவாரா?…எம்பி, எம்எல்ஏக்கள் டெல்லி வர தலைமை உத்தரவு

புதுடெல்லி: ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை 50 மணி நேரம் விசாரணை நடத்தி முடித்த நிலையில், நாளை சோனியா காந்தி அமலாக்கத்துறை முன் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே எம்பி, எம்எல்ஏக்களை ெடல்லிக்கு வர கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 13ம் தேதி அமலாக்கத்துறை முன்பு முதன்முதலாக ராகுல்காந்தி ஆஜரானார். அதன்பின் 14 மற்றும் 15ம் தேதிகளிலும் அவரிடம் விசாரணை நடந்தது. மூன்று நாட்களிலும் மொத்தம் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் நேற்றும், நேற்று முன்தினமும் ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 50 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக பழிவாங்கும் அரசியலில் ஒன்றிய அரசு ஈடுபடுவதாக கூறி, நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் அக்கட்சியின் தலைமையகத்தில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி தொண்டர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராகுல் காந்தியிடம் அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் தீவிரப்படுத்த வேண்டும். அடிப்படை ஆதாரமற்ற வழக்கில் ராகுல்காந்தியிடம் தொடர்ந்து விசாரிப்பது நியாயமற்றது. எனவே, கட்சியின் அனைத்து மாநில எம்பி, எம்எல்ஏக்களும் டெல்லிக்கு வரவேண்டும்’ என்று தெரிவித்துள்ளது. ராகுல்காந்தியிடம் 5 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில், இன்று அவர் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. அதேநேரம் நாளை (ஜூன் 23) காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆஜராக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்ததால், அவர் நாளை அமலாக்கத்துறை முன் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் அவர் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பால் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பின்னர் தற்போதுதான் வீடு திரும்பிய சோனியா காந்தி, தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இதனால் சோனியா காந்தி நாளை அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு ஆஜராவாரா? அல்லது மீண்டும் தற்காலிகமாக ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.